புதன், 16 அக்டோபர், 2013

தொண்டர்களின் மனச்சோர்வை போக்கவா திமுக ஏற்காட்டில் போட்டி ?

 திராவிட இயக்கம் வெற்றி தோல்வியை எதிர்பார்த்து தொடங்கப்பட்டதல்ல. சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது தான் லட்சியம். இன்று தமிழ்நாட்டில் நடக்கும் காட்டாட்சியை பற்றி மக்களுக்கு எடுத்து சொல்ல கிடைத்த வாய்ப்பாக திமுக இதை பார்க்கிறது. மக்கள் பல சமயங்களில் தவறான முடிவையே எடுப்பார்கள் என்ற போதும் ஆளும் கட்சியின் தவறுகளுக்கு முடிவு கட்டவும் தவறியதில்லை. 
தொண்டர்களை இழப்பதோடு, தேர்தல் வேலை செய்ய ஆளில்லாமல் போய் விடும்' என, பொருளார் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கையால், ஏற்காடு இடைத் தேர்தலில் களம் இறங்க தி.மு.க., தலைவர் கருணாநிதி முழு மனதில்லாமல் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.ஏற்காடு இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களைப் பெற்று, நேர்காணலை நடத்தி, வேட்பாளரையும் தி.மு.க., அறிவித்து விட்டது. இவற்றுக்கெல்லாம் ஸ்டாலினே முழுக்கக் காரணம் என, கூறப்படுகிறது.பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின், தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல், சட்டசபை இடைத் தேர்தல்களில், தி.மு.க., பெரும் பின்னடைவை சந்தித்தது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது."ஆளும் கட்சியின் அதிகார பலத்தால், தேர்தலில் போட்டியிடவில்லை' என, காரணம் கூறியது. ஆனால், தொடர் தோல்விகளும், தேர்தல் களத்தில் இருந்து விலகி நிற்பதும், கட்சி தொண்டர்களிடையே, பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.


ஆண்டுதோறும் நடக்கும், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் கூட, தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டவில்லை. இதனால், விரக்தி அடைந்த கருணாநிதி, "வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில், தொண்டர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்' என, அறிக்கை வெளியிட்டார்."கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிலவும் தொய்வு நீடித்தால், லோக்சபா தேர்தலுக்கு, அவர்களைத் தயார்படுத்துவது இயலாத காரியமாகி விடும்' என, ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட கருணாநிதி விரும்பவில்லை.

இடைத் தேர்தலில் போட்டியிட்டால், எதிர்பார்த்த ஓட்டும் கிடைக்காது. இதனால், தொண்டர்கள் மத்தியில் நிலவும் சோர்வு, மேலும் அதிகரிக்கும் எனக் கூறி, போட்டியிடுவதைத் தவிர்க்கலாம் என, தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதையேற்றுக் கொள்ளாத ஸ்டாலின், இரண்டரை ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், வளர்ச்சி ஏற்படவில்லை. பத்திரிகைகள் இதை வெளிப்படுத்தா விட்டாலும், மக்கள் மத்தியில் கோபம் உள்ளது.

இடைத் தேர்தலில், ஆளும் கட்சியை விமர்சிக்கவும், அதன் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும் வாய்ப்புள்ளது. வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கலாம் என, கருணாநிதியிடம் தெரிவித்து, இடைத் தேர்தலில் போட்டியிட, சம்மதிக்க வைத்துள்ளார். கூட்டணி குறித்து கேள்வி எழுந்தபோது, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சுவடு மறைவதற்குள், ராஜ்யசபா தேர்தலுக்கு, காங்கிரஸ் காலில் விழுந்ததே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீண்டும் காங்கிரஸ் ஆதரவை கேட்பது சரியாக இருக்குமா என, தி.மு.க., தலைமை விவாதித்தாகக் கூறுகின்றனர்.

காங்கிரசிடம் தனியாக ஆதரவு கேட்டால் தானே பிரச்னை. "ஆளும் கட்சியின் மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே, அதற்கு, பாடம் கற்பிக்க, அனைவரும் அணி திரள்வோம்' என்று, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடாலம் என, முடிவு செய்து, கடிதமும் எழுதப்பட்டது.
மேலும், இடைத் தேர்தல் மூலம், யார் எந்தப் பக்கம் இருக்கின்றனர் என, தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகவும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், தி.மு.க., தலைவர் கடிதம் எழுதியதாக, தி.மு.க., வட்டாரங்களில் கூறுகின்றனர்.ஏற்காடு இடைத் தேர்தல் மூலம், எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா; தொண்டர்கள் விறு,விறுப்பாக தேர்தல் பணிகளை செய்வரா என்பதெல்லாம், தி.மு.க., பெறும் ஓட்டுகளைப் பொறுத்தது என்றும் கூறுகின்றனர்.

நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: