புதன், 16 அக்டோபர், 2013

போலீஸ் வலையில் நித்தியானந்தா! ஆஷ்ரம லீலைக்கு முடிவு நெருங்குகிறது ! விரைவில் சிறைவாசம் !



நித்தியானத்தாவின் பிடதி ஆஸ்ரமத்தில் செவ்வாய்க்கிழமை காலை கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர். அப்போது நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் 70 குழந்தைகள் யார் யார் என கணக்கெடுத்தனர். இதை நித்யானந்தாவின் சீடர்கள் கடுமையாக எதிர்த்தனர். தொடர்ந்து நித்யானந்தாவின் சீடர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நடந்தது. இதைப் படம் பிடிக்கச் சென்ற டி.வி.9, சொர்ணா டி.வி., பப்ளிக் டி.வி., ஆகிய டி.வி. நிருபர்கள் மீது நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.


25 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் 100 பேரை தங்கவைத்து அவர்களது விருப்பதை மீறி மொட்டை அடித்து சன்னியாசி ஆக்குகிறார். ஆண், பெண் குழந்தைகள் தவறான பாலியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷனின் செயலாளர் உமேஷ் ஆரத்தியாவுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த நித்யானந்தா ஆசிரமத்துக்கு உமேஷ் ஆரத்தியா சென்றபோது அவரை உள்ளே விடவில்லை. அதனால் அவர் நித்யானந்தாவின் மேல் கர்நாடக அரசிடம் புகார் செய்தார்.
கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, உமேஷ் ஆரத்தியா மற்றும் ராம்நகர் டெப்டி கலெக்டர் இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆசிரமத்திற்குள் ரெய்டு நடத்தும்படி உத்தரவிட்டார். அந்த ரெய்டு செவ்வாய்க்கிழமை நடந்தது. அந்த ரெய்டில் வெடித்த வன்முறை மற்றும் நித்யானந்தாவின் ஆட்கள் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றை பற்றி உமேஷ் ஆரத்தியா கர்நாடக அரசுக்கு புதன்கிழமை அறிக்கை கொடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், நித்யானந்தா இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்யானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமல், ஒரு உள்ளூர தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அதன் மூலம்அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என உமேஷ் ஆரத்தியா கூறியுள்ளார்.
உமேஷ் ஆரத்தியாவின் அறிக்கையை தொடர்ந்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது என தெரிகிறது. இதைத் தெரிந்து கொண்ட நித்யானந்தா கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவை, கண்டபடி திட்டி தனது இணையதளத்தில் பேசியுள்ளார். என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டார். நித்யானந்தாவின் இந்த சாபம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தாமோதரன் பிரகாஷ் nakkheeran.in

கருத்துகள் இல்லை: