சனி, 7 செப்டம்பர், 2013

Dr.ராதாகிருஷ்ணன் போன்ற பார்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்றி விட்டார்கள்

‘இன்றைய தினத்தந்தியில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள்
ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை குடந்தை பாலு என்பவர் எழுதியிருக்கிறார். அதில்  தனது பள்ளிப் படிப்பை ‘லூத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும்’ தனது பட்டப் படிப்பை வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும், சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்துவர் கல்லூரியிலும் பயின்று, இந்து தத்துவங்களின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார் ராதாகிருஷண்ன்.
(‘ஆரம்பத்தில் கிருத்துவ மிஷனரிகள், பார்ப்பனர்களை மதம் மாற்றி விட்டால், அவர்களைப் பார்த்து மற்ற ஜாதியினரும் கிறித்துவத்திற்கு வந்துவிடுவார்கள் என்று தனது கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களுக்கே முக்கியத்துவம் தந்தார்கள். ஆனால் பார்ப்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்றி விட்டார்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.)
இந்தியாவின் மிகப் பெரிய படிப்பாளியான டாக்டர் அம்பேத்கர், இந்து வேதங்களை, இதிகாசங்களை, புராணங்களை, மனு தர்மத்தை அம்பலப்படுத்தி அது பார்ப்பன மேன்மையும் நாலு வர்ணமும் ஜாதி வெறியும் கொண்டது என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்த அதே நாட்களில்,
நிறைய படித்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்.  ‘இந்தியா என்றால் இந்து. இந்து என்றால் இந்தியா’ என்பது போல் உலகெங்கும் இந்து மத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக பிரச்சாரம் செய்தவர். அதனாலேயே அவர் தத்துவமேதை என்று கொண்டாடப்பட்டவர்.
அவர் ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். அவரின் பிறந்தநாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறார்கள். அவர் பெரிய தத்துவமேதை என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் சொந்தமாக என்ன தத்துவம் சொன்னார் என்பதை மட்டும் இன்று வரை யாரும் சொல்லவில்லை.
ஆனால், ஒரு முறை அவர், ‘எவ்வளவோ எதிர்ப்புகளைத் தாண்டியும் இந்துமதம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது. அது மிக புனிதமானது’ என்ற தத்துவத்தை உதிர்த்தார்.
அதற்கு தந்தை பெரியார் இப்படிக் கேட்டார்,
‘பல எதிர்ப்புகளுக்கு பிறகு பல ஆண்டுகளாக  உயிருடன் இருப்பதனாலேயே ஒரு விசயம் உயர்வாகி விடுமா? கொசு, மூட்டை பூச்சி போன்றவைகள் கூட பல எதிர்ப்புகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அவைகள் எல்லாம் இந்து மதத்தை விட புனிதமானதா?’
பெரியார் கேட்ட கேள்விக்கு தத்துவமேதை ராதாகிருஷ்ணனிடம் பதில் இல்லை. இன்றுவரை பெரியாரின் அந்தக் கேள்வி, அப்படியேதான் இருக்கிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அது அப்படியேதான் இருக்கும். mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: