சனி, 17 ஆகஸ்ட், 2013

கலைஞர்: கோஷ்டி பூசலில் ஈடுபடாவிட்டால் பெருவெற்றி பெறுவோம் ! சட்டசபை தோல்விக்கு கோஷ்டிகளே காரணம்

 தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. "கூட்டணி தொடர்பாக, மாவட்டச் செயலர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்தார்."லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என, தென் மாவட்டங்களைச் சேர்ந்த, தி.மு.க., மாவட்டச் செயலர்களும், "தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என, வட மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டச் செயலர்களும் விருப்பம் தெரிவித்தனர்.அனைவரின் கருத்துக்களை கேட்ட பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கூட்டணியின் முடிவு பற்றி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கோஷ்டி பூசலில் ஈடுபடாமல், ஒற்றுமையாகப் பணியாற்றுங்கள்' என, அறிவுரை கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மாவட்டச் செயலர்கள் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க., அரசு மீது, பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. "40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம்' என்ற மாயையை, அ.தி.மு.க., தலைமை உருவாக்கியுள்ளது. அரசின் திட்டங்கள் குறித்து, விளம்பரங்கள் தான் பெரியளவில் செய்யப்படுகிறதே தவிர, மக்கள் பயன்பாட்டிற்கு திட்டங்கள் சென்றடையவில்லை.ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் குளறுபடி நிலவுகிறது. விலைவாசியும் கடுமையாக உயர்ந்து விட்டது. கூட்டணி இல்லாமலும் கூட, வட மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பெற முடியும். எனவே, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம். வட மாவட்டங்களில், தி.மு.க., வலிமையாக இருக்கிறது. வட மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கி இல்லை. இவ்வாறு வட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலர்கள் பேசினர்.

தென் மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வங்கி பலமாக உள்ளது. சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்கள் தான், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுத்தது. லோக்சபா தேர்தலில், தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற முடியும். எனவே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். வட மாவட்டங்களில், போட்டியிடும் வேட்பாளர்களை, ஜாதி அடிப்படையில் முக்கியத்துவம் அளித்து தேர்வு செய்தால், தி.மு.க., வெற்றி பெறும். இவ்வாறு, தென் மாவட்டச் செயலர்கள் பேசினர்.

எழுச்சி:

பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், ""தமிழகம் முழுவதும் லோக்சபா தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்; தி.மு.க., எழுச்சியாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். அதிருப்தி ஓட்டுகளை, தி.மு.க.,வுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். உங்களிடம் ஒற்றுமை இருந்தால், நமது வெற்றி நிச்சயம்,'' என்றார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசுகையில்,
""எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை பற்றி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுங்கள். சட்டசபை தேர்தலில், உங்களிடம் ஒற்றுமையின்மை இல்லாத காரணத்தால் தான் தோல்வி அடைந்தோம். மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, லோக்சபா தேர்தலில் உற்சாகமாக பணியாற்றுங்கள்,'' என்றார்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்:

சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், பொருளாளர் ஸ்டாலின், துணைப் பொதுச்செயலர்கள் வி.பி.துரைசாமி, துரைமுருகன், எம்.பி.,க்கள், கனிமொழி, டி.ஆர்.பாலு, மாவட்டச் செயலர்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென் மண்டலச் செயலர் அழகிரி கலந்து கொள்ளவில்லை. லோக்சபா தேர்தலில், எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்க, கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட, சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: