செவ்வாய், 21 மே, 2013

மருத்துவ கல்லூரிகளில் 28,300 விண்ணப்பங்கள் இதுவரை

அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. இவை தவிர, அரசு ஒதுக்கீடாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் 836 எம்.பி.பி.எஸ். இடங்களையும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 909 இடங்களையும் கவுன்சிலிங் மூலமாகத்தான் நிரப்புகிறார்கள்.நடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், சென்னை மருத்துவ கல்லூரிக்கு 85 இடங்களுக்கும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளிக்கும் பட்சத்தில் அகில இந்திய இடஒதுக்கீடு இடங்கள் நீங்கலாக எஞ்சிய இடங்களும் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 9-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழங்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 32,050 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 20.05.2013 திங்கள்கிழமை கடைசி நாள் ஆகும். அதன்படி, கடைசி நாளான திங்கள்கிழமை வரை மொத்தம் 28,300 விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு மருத்துவ படிப்புகளில் சேர 39 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. ஆனால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் 29 ஆயிரம் பேர் மட்டுமே. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 700 பேர் குறைவாக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
ஒருசில மாணவர்கள் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவம் இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பது உண்டு. இந்த ஆண்டும் கணிசமான மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்புக்கும், என்ஜினீயரிங் படிப்புக்கும் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுdinamalar .com 

கருத்துகள் இல்லை: