சனி, 25 மே, 2013

ராமதாசை சந்தித்த கனிமொழி ஸ்டாலின் ! ராஜ்யசபா பேரம் ஆரம்பம்

சென்னை: திமுகவின் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி ஆகியோரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் நலம் விசாரித்திருக்கின்றனர். எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டே பாமகவுடனான இந்த நெருக்கத்தை திமுக வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திராவிட கட்சிகள் எதனுடனும் கூட்டணி கிடையாது என்று தற்போதும் கூட பாமக அறிவித்து வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் பாமக எதிரியாகிவிட்டது. ஆனால் மற்றொரு திராவிடக் கட்சியான திமுகவுக்கோ பாமகவின் தயவு இப்போது தேவைப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி என்னதான் விமர்சித்தாலும் பரவாயில்லை இறங்கிப் போவது என முடிவெடுத்திருக்கிறது போல..அப்படி என்ன தேவை? எதிர்வரும் ராஜ்யசபா தேர்தல்தான்! ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இம்முறை கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவளித்தார்ல் அடுத்த ஆண்டு விஜயகாந்தின் மச்சான் சதீஷுக்கு திமுக ஆதரவளிக்கும் என்பதுதான் பேரம். ஆனால் விஜயகாந்தோ இம்முறை சுதீஷ் என்பதில் உறுதியாக இருந்தார். இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் பேசாமல் தேர்தலையே புறக்கணித்துவிட்டால் என்ன? என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக.. இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் என்று திமுக நம்புகிறது. ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு லோக்சபா தொகுதி கொடுக்கப்படும் என்ற உறுதியுடன் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பேரம் பேசப்பட்டிருக்கிறதாம். எஞ்சிய ஒரு எம்.எல்.ஏ யாராக இருக்க முடியும்? அது தேமுதிக அல்லது தமுமுகவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.... இதுதான் டாக்டர் ராமதாஸை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் சந்தித்துப் பேசியதன் பின்னணியாக சொல்லப்படுகிறது.
tamil.oneindia.i

கருத்துகள் இல்லை: