வெள்ளி, 4 ஜனவரி, 2013

வீடு புகுந்து பலாத்காரம் செய்த காங்கிரஸ் தலைவருக்கு பெண்கள் தர்ம அடி

கவுகாத்தி: அசாமில் கணவன் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த உள்ளூர் காங்கிரஸ் தலைவருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் போடோ பிராந்திய கவுன்சில் காங்கிரஸ் கமிட்டி தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பிக்ராம் சிங் பிரம்மா. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, பக்சா மாவட்டத்தில் உள்ள சபாகுரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நேற்று அதிகாலை போடோ பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். கையும் களவுமாக பிடிபட்ட பிக்ராம் சிங்கை, ஆண்கள் மற்றும் பெண்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரது சட்டையை கிழித்து எறிந்தனர். இதற்குள் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிக்ராம் சிங்கை மீட்டனர். புகாரின்படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக 2 மாதமாக பிக்ராம் சிங் ஏமாற்றி வந்ததும், கணவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிக்ராம் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் முகாமிட்டுள்ள அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் கூறுகையில், இது மிகவும் கொடூரமான கண்டனத்துக்குரிய குற்றம். இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார். tamilmurasu.org

கருத்துகள் இல்லை: