புதன், 26 டிசம்பர், 2012

நில ஆவணப் பறிப்பு வழக்கு. Hindu N.ராம், ரமேஷ் ரங்கராஜன் கோர்ட்டில் சரண்

கோயமுத்தூர்: 400 ஏக்கர் நிலம் தொடர்பான சொத்துப் பத்திரங்களைப் பறித்துச் சென்றதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் பெற்ற இந்து என். ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.
முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி, கோவை அரசு கலைக்கல்லூரி அருகே சேரன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்து நாளிதழை நடத்தும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட்டைம் இந்தியா என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள 400 ஏக்கர் நிலத்தை பழனிச்சாமி ரூ. 30 கோடி விலை கொடுத்து வாங்கினார்.கடந்த 2004ம் ஆண்டு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் விலை அடுத்த ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை திரும்ப தருமாறு கஸ்தூரி சன்ஸ் நிறுவனம் கேட்டுள்ளது. பழனிச்சாமி தர மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த நிலையில்,கோவையில் உள்ள தனது அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை பறித்து சென்றதாக அப்போது இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியராக இருந்த என்.ராம், இந்து இயக்குநர் ரமேஷ் ரங்கராஜன், பிரேம் வாட்சா, ராமசாமி அத்தப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோவை போலீசில் பழனிச்சாமி புகார் கொடுத்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார்.
அவர் கொடுத்திருந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர போலீசாருக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் உட்பட 10 பேர் மீது 120(பி) கூட்டு சதி, 395 (கூட்டு கொள்ளை), 457 (பகல் நேரத்தில் அலுவலகத்திற்குள் புகுந்து களவில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் செப்டம்பர் 24ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் ராம், ரமேஷ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரேசன் இருவருக்கும் கடந்த 19ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.அதன்படி, கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து தலா இரு நபர் மற்றும் ரூ. 10,000 ரொக்கம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். இருவரும் தினமும் காலை 10 மணிக்கு கோவை மாநகர போலீசின் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இதையடுத்து ராம், ரமேஷ் ஆகியோர் நேற்று முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி முனுசாமி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் ஒரு வாரம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: