திங்கள், 24 டிசம்பர், 2012

Delhi 6 பேரும் என்னை சீரழித்து விட்டனர். 30 நிமிடம் வரை அந்த பயங்கரம்

 பஸ்சில் நடந்த பயங்கரத்தை விவரித்த மாணவி: மாஜிஸ்திரேட்டிடம் உருக்கமான வாக்குமூலம்.
புதுடெல்லி, டிச.24 - பஸ்சில் நடந்த 30 நிமிட பயங்கரத்தை மாணவி வாக்குமூலமாக அளித்தார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட மாணவி ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வருகிறார். 3 நாட்கள் அவர் அபாய கட்டத்தில் இருந்தார். வயிற்றில் இரும்பு கம்பியால் தாக்கியதால் குடல் பகுதி பாதிப்பு அடைந்தது. இதற்கு பல ஆபரேஷன்கள்  நடந்தன. தற்போது மாணவி குணம் அடைந்து வருகிறார். அவருக்கு சுய நினைவு திரும்பியது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. நண்பர் சந்திப்பு நேற்று மாணவியை அவரது சாப்ட்வேர் என்ஜினீயர் நண்பர் சந்தித்து நலம் விசாரித்தார். அவரைப் பார்த்ததும் மாணவி தெம்பாக காணப்பட்டார். அவரது உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு உடல் உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கின. இதையடுத்து அவரை அடிக்கடி வந்து பார்த்துச் செல்லுமாறு நண்பரிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர். நேற்று இரவு முழுவதும் நண்பர் மாணவியுடன் அருகில் இருந்தார்.  மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டது. இரவு 9.30 மணிக்கு டெல்லி மாஜிஸ்திரேட்டு, ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மாணவி பஸ்சில் நடந்த கொடூர பயங்கரத்தை விவரித்தார். மாணவி தெரிவித்த விவரங்கள் டேப்பில் பதிவு செய்யப்பட்டது. அப்போது தெற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் சாயாசர்மா உடன் இருந்தார். மாணவி அளித்த வாக்குமூல விவரங்களை அவர் வெளியிட்டார். வாக்குமூலத்தில் மாணவி கூறியிருப்பதாவது.
கடந்த 16-ந் தேதி இரவு நான் எனது நண்பருடன் முனிர்கா பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது ஒரு பஸ் வந்து எங்கள் அருகே நின்றது. 16 வயது சிறுவன் ஒருவன் படிக்கட்டில் நின்றவாறு எங்களைப் பார்த்து பஸ் பாலம் நோக்கி செல்கிறது ஏறிக்கொள்ளுங்கள் என்றான்.

உடனே நானும் நண்பரும் பஸ்சில் ஏறிக்கொண்டோம். உள்ளே 6 பேர் இருந்தனர். பஸ் சென்ற சில நிமிடங்களில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பஸ் வேறு திசையில் செல்வது போல் தெரிந்தது. திடீர் என்று பஸ்சில் இருந்த 6 பேரும் பஸ்சின் கதவு மற்றும் ஜன்னல்களை இழுத்து மூடினார்கள். நான் ஏன் கதவை மூடுகிறீர்கள் என்று சத்தம் போட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து இழிவாகவும், அசிங்கமாகவும் பேசினார்கள். ராத்திரியில் என்ன செய்வார்களோ  அதைத்தான் செய்யப்போகிறோம் என்றனர். நிலைமை விபரீதமாவதை அறிந்த என்னுடன் வந்த நண்பர் அவர்களை தட்டிக்கேட்டார். உடனே ஒருவன் (ராம்சிங், கைதான பிரதான குற்றவாளி) இரும்பு கம்பியை எடுத்து வந்து தலையில் அடித்தான். அதே போல் என்னையும் தாக்கினார்கள். இதில் எனது நண்பர் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட பஸ்சுக்குள் கீழே மயங்கி விழுந்தார். அதன்பிறகு ராம்சிங் வந்து என்னை முதலில் பலாத்காரம் செய்தான். அப்போது அவர்கள் - ஒருவருக்கொருவர்  ராகுல், அக்ஷய் என்று பெயர் சொல்லி அழைத்துக் கொண்டனர். ஒவ்வொருவராக என்னை பலாத்காரம் செய்தனர். 6 பேரும் என்னை சீரழித்து விட்டனர். 30 நிமிடம் வரை அந்த பயங்கரம் நடந்தது.
நான் மயக்கம் அடைந்ததும்  எங்கள் இருவரையும் வெளியே தூக்கி வீசி விடலாமா? என்று பேசிக் கொண்டனர். முதலில் எனது நண்பரை வெளியே தூக்கி வீசி விடலாமா? என்று பேசிக் கொண்டனர். முதலில் எனது நண்பரை வெளியே தூக்கி வீச முயன்றனர். அதன் பிறகு முடிவை மாற்றிக் கொண்டனர். பின்னர் சிறிது தூரம் போனதும் எங்களை தூக்கி வெளியே வீசி விட்டனர்.  இவ்வாறு மாணவி கூறினார். சிறுவன் கைது கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உள்பட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட சிறுவன் தான் பஸ் நிறுத்தத்தில்  மாணவியை பஸ்சில் ஏறிக்கொள்ளுமாறு கூவி அழைத்தவன். சிறுவன் என்பதால் நம்பி மாணவி பஸ்சில் ஏறி விட்டார்.  ஆனால் உள்ளே 6 காமுகர்கள் இருப்பது பின்னர்தான் மாணவிக்கு தெரியவந்தது. இதனால் பயங்கரம் அரங்கேறியது.

கருத்துகள் இல்லை: