புதன், 26 டிசம்பர், 2012

ஒடிசாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 354 தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டியில் மீட்பு

கும்மிடிப்பூண்டி: ஒடிசாவில் இருந்து கும்மிடிப் பூண்டிக்கு அழைத்து வரப்பட்ட 354 தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு வேலை செய்ய ஒடிசாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரயிலில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்டிஓ கந்தசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் வெங்கடேசன், டிஎஸ்பி ஜோஸ் தங்கையா ஆகியோர் நேற்றிரவு ரயில் நிலையத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது ரயிலில் வந்து இறங்கிய ஒடிசாவை சேர்ந்த 354 பேரை அதிகாரிகள் மீட்டனர். அவர்களை கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர். தொழிலாளர்களை ஏஜென்ட்கள் யாராவது அழைத்து வந்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். tamilmurasu.org

கருத்துகள் இல்லை: