வியாழன், 15 மார்ச், 2012

Kerala கோவில்களில் 50 விகிதம் பார்ப்பனர் அல்லாதாருக்கு அர்ச்சகர் பணிகள்!

தமிழ்நாடு அரசு பின்பற்றுமா?
திருவனந்தபுரம், மார்ச் 14- கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் 50 சத விகிதம் இடங்களை பார்ப்பனர் அல்லாதோரை நியமித்துள்ளது.
கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராக வேண்டும் என்றார் தந்தை பெரியார்.  தீண்டாமையை எதிர்த்துத் தந்தை பெரியார் நடத்திய வைக்கம் கேரளாவில்தான் உள்ளது. அங்கு மறுபடியும் சமூகப் புரட்சிக்கு வழி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சத்தம் இல்லாமல் ஒரு மவுன கலாச்சாரப் புரட்சி ஒன்றை திருவாங்கூர் தேவஸ் தானம் தொடங்கி வைத்துள்ளது என்று கூட இதனை சொல்லலாம் என சமூக விமர்சகர்கள் கருதுகின்றனர். இனி கேரள கோவில்களில் புதிய மாறுதலைப் பார்க்கலாம்.
திருவாங்கூர் தேவஸ்தான போர்டுக்கு உட்பட்ட கோவில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் 50 சதவிகித பணியிடங்களை பார்ப்பனர் அல்லா தோரை கொண்டு நிரப்ப முடிவு செய்தது.
திருவாங் கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்டு அம்மாநிலத்தில் 2,000த்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணியிடங் களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதற்கான நேர் காணல்களும் அனைத்து ஜாதியினரைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் நடத்தப்பட்டன. இதில் 199 அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லா தோர் ஆவர் என தேவஸ்தான போர்டு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார். ஜாதி தடை இல்லை என்ற அறிவிப்பின் கீழ் சமஸ்கிருதத்தில் குறிப்பிடத்தக்க கல்வித் தகுதியை பெற்ற அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
மேலும், மலையாளி இந்து மதத்தைச் சார்ந்த பாரம்பரிய நடவடிக்கைகள் குறித்த அறிவுடைய வராகவும் விண்ணப்பத்தாரர்கள் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. என ஆல்வாய் தாந்திரிக நித்யா பீடா பொதுச்செயலாளர் கிருஷ்ணன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.
இது வெறும் பதவி மட்டுமல்ல; புனிதமான சேவையும் ஆகும். வெறும் சமஸ்கிருத மந்திரங்களை மட்டும் தெரிந்திருந்தால் மட்டும் போதாது என ஒரு சில தரப்பில் இருந்து எதிர்ப்பை இந்த அறிவிப்பு சந்தித்த போதிலும் கூட அம்மாநிலம் முழுவதும் பெருவாரியான மக்களிடம் இருந்து வரவேற்பையே பெற்றுள்ளது என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுமா? நாடே எதிர்பார்க்கிறது

கருத்துகள் இல்லை: