வெள்ளி, 16 மார்ச், 2012

118 கோடிக்கு சொத்து குவித்த இளம் துணை கலெக்டர் கைது

மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த துணை கலெக்டர், 118 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில், 1988ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை, பல்வேறு மாவட்டங்களில் துணை கலெக்டராக பணியாற்றியவர் நிதிஷ் தாக்கூர். கடந்த ஆண்டு பிப்ரவரியில், முகேஷ் வகேலா என்ற கட்டுமான நிறுவன உரிமையாளரை மிரட்டியது தொடர்பாக, நிதிஷும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, நிதிஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நிதிஷின் சொத்துகளை கண்காணித்தனர். மகாராஷ்டிராவின், எட்டு நகரங்களில், 26 இடங்களில், 118 கோடி ரூபாய் அளவுக்கு, நிதிஷ் சொத்து சேர்த்துள்ளது தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அவரை கைது செய்ய சென்ற போது, மும்பையின் வில்லிபார்லி பகுதியில் உள்ள சொகுசு பங்களாவிற்கு சென்று, அவர் தாழிட்டுக் கொண்டார். ஊழல் தடுப்பு அதிகாரிகள், கதவை உடைத்து சென்று, அவரை கைது செய்துள்ளனர். துணை கலெக்டராக பணி புரிந்த நிதிஷின் மாத வருமானம், 50 ஆயிரம் ரூபாய்.
ஆனால் அவர், வருவாய்க்கு அதிகமாக, பல மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக, மகாராஷ்டிர வீட்டு வசதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்னுடைய சொத்து குவிப்பு விஷயம் வெளியே தெரிந்ததும், உடனடியாக அவர் தன்னுடைய சொத்துகளை, மனைவி, தாய் மற்றும் சகோதரர் பெயரில் மாற்றம் செய்துள்ளார். நிதிஷிடமிருந்த ஏராளமான சொகுசு கார்களையும், நகைகளையும், பணத்தையும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: