புதன், 14 மார்ச், 2012

சங்கரன்கோவில் வைகோவை முந்த துடிக்கும் விஜயகாந்த்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், கவுரவமான ஓட்டுக்களை பெற்று, மூன்றாம் இடத்தையாவது அடைந்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியில், தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ., என, ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது. இதில், வெற்றி வாகை சூடப்போவது, எந்தக் கட்சி என்பதைவிட, இரண்டாம், மூன்றாம் இடத்தை, எந்தக் கட்சிகள் பிடிக்கப்போகின்றன என்பது தான், பலருக்கும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் சவாலை ஏற்று களமிறங்கியுள்ள, தே.மு.தி.க., தலைமை, கவுரவமான ஓட்டுக்களை பெற்று, கட்சியின் அந்தஸ்தை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.
அதற்கேற்ற வகையில், தேர்தல் வியூகங்களையும் கட்சித் தலைமை வகுத்துள்ளது. அக்கட்சியின், 58 மாவட்ட செயலர்களும், பண்ருட்டி ராமச்சந்திரனை தவிர, 27 எம்.எல்.ஏ.,க்களும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ஒன்றியம், ஊராட்சிகள் அளவில், தேர்தல் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், அந்தந்த பகுதிகளில், வீடுகளை வாடகைக்கு பிடித்து, தேர்தல் பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை, சிறப்பாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்கவும், மாநில நிர்வாகிகள் அடங்கிய சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா ஆகியோர், தொகுதியில் முகாமிட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருவருமே, அ.தி.மு.க.,வை மட்டுமே அதிகம் விமர்சித்து வருகின்றனர்.தொகுதியில், தே.மு.தி.க.,வினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பலம் சேர்ப்பதற்காக, திருநெல்வேலியை ஒட்டிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களும், நேற்று அங்கு அழைக்கப்பட்டனர். கட்சி தலைமையின் அழைப்பை ஏற்று, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க.,வினர், நேற்று சங்கரன்கோவில் புறப்பட்டு சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரசாரம் செய்யவுள்ள நிலையில், தங்கள் பக்கம் கூட்டம் குறைவதை சமாளிக்க வசதியாக, இந்த ஏற்பாட்டை, தே.மு.தி.க., தலைமை செய்துள்ளது. இவர்கள் வந்து செல்வது, தங்குவதற்கான செலவுகளை, மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் தான் ஏற்க வேண்டும் எனவும், கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க., தி.மு.க.,வை விட, ம.தி.மு.க.,வையே இந்த தேர்தலில், தே.மு.தி.க.,வினர் போட்டியாக பார்க்கின்றனர். அந்த கட்சியை விட, ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கி, அந்த கட்சிக்கு முந்தைய இடத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே, தே.மு.தி.க.,வின் இலக்காக இருக்கிறது.

விஜயகாந்துடன் கிராமவாசி வாக்குவாதம்: சங்கரன்கோவில் அருகே தொண்டர்கள் முன்னிலையில், கிராமவாசி ஒருவர் தகராறில் ஈடுபட்டதால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தை பாதியில் முடித்து கிளம்பினார்.

விஜயகாந்த், கடையாலுருட்டியில் பிரசாரம் செய்தார். வாகனத்திலிருந்தபடி, அவர் பேசும் போது, ""இடைத்தேர்தலுக்கு பின் மின்வெட்டு அதிகரிக்கும் என்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, அதிகளவு மின்வெட்டு ஏற்படுகிறது'' என்ற போது, குறுக்கிட்ட கிராமவாசி ஒருவர், ""மின்சாரம் இருக்கிறதால தானே நீங்க பேசுறீங்க'' என்றார். இதை கேட்டு எரிச்சலான விஜயகாந்த், ""யாரு நீங்க...'' என, அவரை நோக்கி கேட்க, ""எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு...'' என, கிராமவாசி பதில் கூற, ""மேல வா'' என, சூடானார் விஜயகாந்த். அதே சூட்டுடன், ""நீ... கீழே வா'' என்றார் கிராமவாசி. வாக்குவாதம் கடுமையாக, கிராமவாசியை போலீசார் அமைதிப்படுத்தினர். போலீசாரை சூழ்ந்த தே.மு.தி.க.,வினர், "நாங்கள் போகும் இடமெல்லாம்... ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள்; முதல்வர் ஜெ., வரும் போது நாங்களும் பதிலுக்கு செய்வோம்,' என்றனர். "சம்பந்தப்பட்ட நபர், கட்சியை சார்ந்தவர் அல்ல,' எனக் கூறிய போலீசார், தே.மு.தி.க.,வினரை சமாதானப்படுத்த முயன்றனர். தகராறை தொடர்ந்து, தன் பிரசாரத்தை முடித்த விஜயகாந்த், அடுத்த பகுதிக்கு கிளம்பிச் சென்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: