வியாழன், 15 மார்ச், 2012

ரெயில்வே பட்ஜெட் மம்தா காங்கிரஸுக்கு செக் வைக்க நினைத்துவிட்டார்

பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக தங்கள் சொந்த மாநில ஓட்டுக்காக அவர்கள் மாநிலத்துக்கு புதிய ரயில்கள் என்று அறிவிப்பார்கள் மத்திய அமைச்சர்கள். ஆனால் இந்த முறை பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையும் ரூ. 5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 1Km 5 பைசா உயர்ந்தது என்ற செய்தி தான் ஹாட். இதை குறித்து பிரதமரிடம் கேட்டதற்கு "தொலைநோக்கு பார்வைக் கொண்ட ரெயில்வே பட்ஜெட்" இது என்கிறார். இதே தொலைநோக்கு தொலைப்பேசித் துறையில் இல்லாது போனது வேடிக்கை.
இதைவிட வேடிக்கை தினேஷ் திரிவேதிக்கு அவர் கட்சியே கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தி தான்.
இதை கேள்விப்பட்ட உடனே தினேஷ் திரிவேதி எல்லா மீடியாவிற்கும் "கட்சியை விட நாடு முக்கியம்" என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். உங்க பதவி போகாதா என்று கேட்டதற்கு பகத் சிங் விடுதலைக்கு உயிரையே விட்டார் என்று ஒரு போடு போட்டார்!
புகைச்சல் 1:
உடனே அவருக்கு நாட்டுப்பற்று என்று தப்பு கணக்கு போட வேண்டாம். சில வாரம் முன்பு இவர் ராகுல் காந்தியை Closed Doorsல் சந்தித்தார். சந்தித்த உடன் மம்தா இவரை கொல்கத்தாவிற்கு அழைத்து விளக்கம் கேட்டார் என்று பலருக்கு தெரிந்திருக்காது. இவர் ராஜினாமா செய்தால் இவருடைய எதிர்காலத்தை காங்கிரஸ் பார்த்துக்கொள்ளும். மம்தா கட்சியை உடைத்தால் அவர்களுக்கு லாபம் தானே !
புகைச்சல் 2:
கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்துக்கு தனது கட்சி சார்பில் ஜூனியர் எம்.பி.யை மம்தா பானர்ஜி அனுப்பி இருந்தார். இது காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் செயல் என்று பரவலாக பேசப்பட்டது. திமுகவில் டி.ஆர்.பாலு என்ற Experienced விருந்தினர் மாதிரி மம்தா இன்னும் ஒருவரை உருவாக்கவில்லை என்பது அவருக்கு பெரிய தலைகுணிவு.

மம்தா காங்கிரஸுக்கு செக் வைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார் அதற்கு இது ஒரு சாக்கு. தற்போது மம்தா பிரதமருக்கு எழுதிய கடித்ததில் தினேஷ் திரிவேதியை பதவியிலிரிந்து தூக்கிவிட்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் ராயை ரயில்வே மந்திரியாக உடனே நியமிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். வழக்கம் போல காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் வீட்டில் மிட் நைட் மசாலா பாக்க ஒன்று கூடியுள்ளார்கள்.

காங்கிரஸ் உடல் நலம் இல்லாமல் ஐ.சி.யூவிற்கு போவதும் தலைவர்கள் ஒன்று கூடி ஆக்ஸிஜன் கொடுத்து திரும்ப உயிர் வருவதும் நமக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். இன்னும் கொஞ்ச நாளில் காங்கிரஸ் கோமா நிலைக்கு போனால் நல்லது.

இனி பிரதமர் என்ன செய்வார் ? மம்தா நிர்பந்ததுக்கு அடிபணிவாரா ? அல்லது நாட்டின் நலனே முக்கியம் என்று இருப்பாரா ? இருக்கவே இருக்கா பிரணாப் முக்கர்ஜி இனி அவர் தான் பேசுவார். பார்க்கலாம்.

சிபு சோரன், அ.ராசா போன்றவர்களை கூட்டணி தர்மத்துக்காக சேர்ந்த்துக்கொண்ட பிரதமர் மீது அவருக்கே நம்பிக்கை இருக்காது. நமக்கு எப்படி இருக்கும் ?

கருத்துகள் இல்லை: