வியாழன், 15 மார்ச், 2012

அனாதை என்று ஆசிரியர் திட்டியதால் வேதனை-தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவன்!

தஞ்சை: மற்ற மாணவர்கள் முன்பு தன்னை அனாதைப்பயலா என்று ஆசிரியர் கேட்டதால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டுக் கொண்டார். அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி. தனியார் குளிர்பான நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மகன் முகமது இத்ரீஸ்(17). அவர் திருவிடைமருதூர் அருகே புளியம்பேட்டையில் உள்ள தனது சித்தி ஷகீலா பானு வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
அண்மையில் நடந்த பள்ளித் தேர்வில் இத்ரீஸ் மிகவும் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதனால் அவரை தமிழாசிரியர் சாரதி கண்டித்துள்ளார்.
மேலும் இது போன்று குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் பொதுத் தேர்வுக்கு அனுப்ப முடியாது என்றும் எச்சரித்துள்ளார். மதிப்பெண் விவகாரம் குறித்து பேச அவருடயை பெற்றோரை அழைத்து வருமாறு சாரதி கூறியுள்ளார்.

ஆனால் இத்ரீஸ் தனது பெற்றோரை அழைத்து வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் பல மாணவர்கள் முன்பு இத்ரீஸை பெற்றோரை அழைத்து வரச்சொல்லியும் ஏன் அழைத்து வரவில்லை, நீ என்ன அனாதைப்பயலா என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.

அவமானத்தால் மனம் உடைந்த இத்ரீஸ் அழுது கொண்டே பள்ளியை விட்டு கிளம்பியுள்ளார். பின்னர் சித்தி வீட்டுக்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை. இது தான் சமயம் என்று அவர் சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார். அந்த நேரம் அங்கு வந்த ஷகீலா பானு மற்றும் உறவினர்கள் இத்ரீஸை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: