சனி, 7 மே, 2011

போர்க்குற்ற விசாரணை நடத்திய நிபுணர் குழுவைக் கலைத்தார் பான் கி மூன்!

கொழும்பு: இறுதிப் போரில் இலங்கையில் நிகழ்ந்த போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிபுணர் குழுவை கலைக்க நேற்று உத்தரவிட்டார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன்.

விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித இனமே பார்த்திராக கொடூரங்கள் அரங்கேறின, இந்த போரில். இந்த தமிழ் இன அழிப்பைஉலகமே வேடிக்கைப் பார்த்தது.

இந்த நிலையில் போர் முடிந்ததும், வன்னிப் பகுதியில் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்தார்.

இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ஐ.நா.பொதுச்செயலரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை இலங்கை ஏற்கவில்லை. அத்துடன் நில்லாது அறிக்கையைக் கண்டித்து இலங்கையில் மே 1-ம் தேதி பேரணியும் நடத்தியது இலங்கை அரசு.

இந்நிலையில் நிபுணர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் முற்று பெற்றுவிட்டதால் அக் குழுவினை கலைப்பதாக நேற்று அறிவித்தார் பான் கி மூன்.

இந்த விசாரணையின் போது இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குரிய தகவல்கள் அளித்தவர் பற்றிய விவரங்களை இருபது வருடங்களுக்கு வெளியிடக்கூடாது என்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பான் கி மூன்.

கருத்துகள் இல்லை: