செவ்வாய், 3 மே, 2011

35 ஆயிரம் இலங்கையரின் இரட்டைப் பிரஜாவுரிமை மீளாய்வு "இரத்துச் செய்யும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு'

வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 35 ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயம் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், இரட்டைப் பிரஜாவுரிமை கோரி விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை கடுமையான முறையில் பரிசீலிப்பதற்கான திட்டங்களை அரச அதிகாரிகள் கொண்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

தாங்கள் பிறந்த நாட்டுக்கு விசுவாசமுள்ளவர்களும் தமது வரிகளைச் செலுத்துவதன் மூலம் நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளிப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் டபிள்யூ ஏ.சூலானந்த பெரேரா கூறியுள்ளார் 1987 இல் இரட்டைப் பிரஜாவுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் இரட்டைப் பிரஜாவுரிமையை இரத்து செய்வதற்கான அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சு கொண்டுள்ளது. தனிப்பட்ட ஒருவர் இந்த வசதியை அனுபவிப்பதற்கு விசேடப்படுத்தப்பட்டுள்ள தேவைகளைக் கொண்டிராவிடின், எந்தத் தருணத்திலும் அவரின் இரட்டைப் பிராஜாவுரிமையை இரத்து செய்யும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு உள்ளதாக சூலானந்த பெரேரா கூறியுள்ளார்.

உதாரணமாக தமது பிள்ளைகளின் கல்வி அல்லது பாரிய வர்த்தகம் மற்றும் ஏனைய நலன்களுக்காக வெளிநாட்டில் வசிப்பதற்கான நிலைமையேற்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இந்த வசதிகள் வழங்கப்படும். ஆனால், அதேசமயம் அவர்கள் இலங்கைக்குச் செலுத்த வேண்டிய தமது வரிகள் தொடர்பான கடப்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக நாட்டுக்குப் பாதிப்பையேற்படுத்தும் ஏனையோரும் இரட்டைப் பிரஜாவுரிமையை நாடுகின்றனர்.இந்த விடயம் தொடர்பாக தற்போது மீளாய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மறைமுக நிகழ்ச்சித் திட்டம் இல்லாமல் இலங்கைக்கு உதவுகின்ற ஆட்களை கவனமான முறையில் தெரிவு செய்வதே பிரதான நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இந்தப் பரிசீலனைகள் இன,மத ரீதியாக அமையாதெனவும் முற்றுமுழுதாக விசுவாசம்,ஈடுபாடு என்பவற்றின் அடிப்படையிலேயே அமையுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமைக்கான விசேட முன்னுரிமை சிரேஷ்ட பிரஜைகளுக்கும் தொழில்சார் நிபுணர்களுக்கும் வழங்கப்படுமெனவும் குறிப்பிட்ட அவர் இந்த வருட முற்பகுதியில் புதிய இரட்டைப் பிரஜாவுரிமைகளை வழங்குவதை அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது இரட்டைப் பிரஜாவுரிமை கோரும் 3300 விண்ணப்பங்கள் இருப்பதாகவும் சுமார் 620 விண்ணப்பங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடமிருந்து இறுதி அங்கீகாரம் பெற அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதற்கு இரண்டு இலட்சம் ரூபா செலுத்தப்பட வேண்டும். அல்லது 25 இலட்ச ரூபா பெறுமதியான சொத்து அல்லது 25 இலட்சம் ரூபா பெறுமதியான வங்கிக் கையிருப்பைக் கொண்டிருக்க வேண்டுமென்ற விதிமுறை இருந்து வந்தது
.

கருத்துகள் இல்லை: