-பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்
தோழர். வே. மதிமாறன் எழுதிய காந்தி நண்பரா? துரோகியா என்கிற நூல் அங்குசம் வெளியீடாக வந்துள்ளது. நேற்றுதான் (21.01.2012) அந்நூல் கிடைக்கப் பெற்று வாசித்து முடித்தேன். எழுத்தாளர் மதிமாறன் ஏற்கனவே எழுதிய நூல்களையும் அவைகள் ஏற்படுத்திய அதிர்வுகளையும் நான் அறிவேன்.
குறிப்பாக பார்ப்பன பாரதியை அவர் ஆதாரப்பூர்மாக அம்பலப்படத்திருந்த ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி என்கிற நூலில் அவர் பாரதி மீது வைத்த விமர்சனங்களுக்கு பாரதி ஆய்வாளர்கள் பாரதிபக்தர்கள் பாரதிதாசர்கள் ஒருவர்கூட மறுப்பேதும் சொல்லவில்லை.
இந்த கள்ள மவுனத்திற்குப் பின்னால், ஒளிந்துகொண்டிருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம். சாதி வெறியர்களும் மதவெறியர்களும் ஏகாதிபத்திய தாசர்களும் ஒளிந்து கொள்ளும் இடமாக பாரதி இன்றும் இருந்து வருகிறான். அவனை தாங்கிப் பிடிக்கும் பிழைப்புவாத கம்யுனிஸ்டுகளுக்கும் இது பொருந்தும்.
தமிழ் அறிவுலகம் என்பது சூனியங்களால் நிரம்பிக்கிடப்பதை நேர்மையாக சிந்திக்கிற யாரும் உணர முடியும். மகாகவியை தோலுரித்த மதிமாறன் இப்போது ‘மகாத்மா’ வைத் தோலுரித்திருக்கிறார்.
இந்துத்துவம், சாதியம், முதலாளியம், எப்படி மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறுகிறதோ அதைப் போலவே காந்தியும் புதுப்பிக்கபடுகிறார். மார்க்சீயம், அம்பேத்கரியம், பெரியாரியம் பேசி ஆளும் வர்க்கத்தை, ஆதிக்க சாதிகளை பகைத்துக் கொள்வதைவிட, காந்தியம் பேசி பொது நீரோடத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவே பெரும்பாலான பிழைப்புவாத அறிவுத் துறையினர் முயற்சிக்கின்றனர். காந்தியம் சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்தப்படுகிறது.








