திங்கள், 6 பிப்ரவரி, 2012

இலவச மிக்சி, கிரைண்டர், பேன் திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரத்தையடுத்த கோலியனூர் ஒன்றியத்தில் திருபாச்சனூர், காவணிப்பாக்கம், கொளத்தூர், வி.அரியலூர், எ.குச்சிப்பாளையம், அத்தியூர்திருவாதி, வேளியம்பாக்கம், சத்திப்பட்டு, வேடப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 3,052 குடும்பங்களுக்கு அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த கிராமங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் விலையில்லா பொருள்களை அமைச்சர் வழங்கி பேசினார்.
இந்த திட்டத்திற்காக முதல்வர் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். ஒரு லட்சம் பசுமை வீடுகள் கட்ட திட்டமிட்டு, இந்த ஆண்டு 60 ஆயிரம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தானே புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசை எதிர்பார் க்காமல் முதல்வர் ரூ.850 கோடி ஒதுக்கினார்.
புயல் நிவாரணம் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள், ஆனால் உங்களுக்குத் தெரியும் முதல்வர் என்ன செய்தார் என்று. கேள்வி கேட்டவர்கள் நேற்று சட்டப்பேரவைக்கே வரவில்லை
சட்டப்பேரவையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாக முதல்வர் அறிவித்தார். அதன் மூலம் பல்வேறு சலுகைகள் மாவட்டத்திற்கு கிடைக்க உள்ளன. நிலவரி கட்ட வேண்டியதில்லை, கூட்டுறவு சங்கத்தின் குறுகிய காலக் கடன்களை மத்தியகால கடன்களாகவும், மத்திய காலக் கடன்களை நீண்ட காலக் கடன்களாகவும் மாற்றியமைத்து விவசாயிகளுக்கு உதவி புரிந்துள்ளார்.
இதுதவிர ரூ.1,000 கோடி மதிப்பில் புயல் பாதித்த 2 மாவட்டங்களிலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். நிரந்தர பயிர் பாதுகாப்பிற்கு ரூ.760 கோடி ஒதுக்கி முந்திரி, தென்னை, பலா உள்ளிட்ட பயிர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு அரசே பராமரித்துத் தரும் என்று ஆணையிட்டுள்ளார்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: