வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் ..படையெடுக்கும் தலைவர்கள் தொண்டர்கள்

 tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில அரசியல் களம் பல்வேறு ட்விஸ்ட்களை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இன்று திடீரெனத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிமுக- பாஜகவின் என்டிஏ கூட்டணி, சில மாதங்களாகவே பல்வேறு கூட்டணிக் கட்சிகளையும் உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதற்கேற்ப அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.


அதேநேரம் சசிகலா தரப்பு தேர்தல் விவகாரத்தில் அமைதியாகவே இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை சசிகலா- டிடிவி தினகரன்- ஓபிஎஸ் சேர்ந்து களமிறங்கலாம் எனச் சொல்லப்பட்டது. செங்கோட்டையன் கூட இவர்களுக்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் ஐக்கியமாகிவிட்டார். டிடிவி தினகரன் தனது அமமுக கட்சியை என்டிஏ கூட்டணியில் சேர்த்துவிட்டார். ஓபிஎஸ் கூட எடப்பாடி தலைமையை ஏற்கத் தயாராகிவிட்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வரிசையாக விலகிச் செல்லவே, அவரும் வேறு வழியில்லாமல் இருக்கிறார். இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்றும் அழைத்துத் தூதுவிட்டு இருந்தார்.
முக்கியமான பாயிண்டு

அதேநேரம் மறுபுறம் சசிகலா எந்தவொரு முடிவையும் எடுக்காமலேயே இருந்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம் சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும் அதில் அவரது நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று மட்டும் பதிலளித்தார்.

இதற்கிடையே இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் பலரும் சசிகலா சட்டசபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், புதிய கட்சி தொடங்குவது குறித்தும் சசிகலா ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் சசிகலா புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்படி சசிகலா தனிக்கட்சியை ஆரம்பித்தால் அது பெரிய ட்விஸ்ட்டாகவே இருக்கும். மேலும், அவரால் திமுக கூட்டணிக்கு வர முடியாது.. என்டிஏ கூட்டணிக்கும் அவர் செல்ல வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனவே, விஜய்யுடன் சேர்வது அல்லது தனித்து சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே நிற்பது என இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே அவரிடம் இருக்கும். எனவே, அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.

முன்னதாக கடந்த 2021 சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து ரிலீஸ் ஆனார். அப்போதே அவர் 2021 சட்டசபைத் தேர்தலில் களமிறங்கலாம் என்றும் அது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூடச் சொல்லப்பட்டது. ஆனால், தேர்தலுக்குச் சில மாதங்கள் இருக்கும்போது, தேர்தலில் போட்டியிடவில்லை.. தற்காலிகமாக அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று சொல்லி அவர் அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: