மின்னம்பலம் - christopher : தவெக இரண்டாம் ஆண்டு விழா கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. tvk vijay bouncers attack journalist
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்ரவரி 26) கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அரங்கில் கூடியிருந்த தொண்டர்களின் பலத்த கோஷத்திற்கு இடையே சரியாக 10 மணிக்கு தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் மேடையேறினார் கட்சியின் தலைவர் விஜய்.
தொடர்ந்து இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை எதிரான இயக்கத்தை முதல் ஆளாக கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே தவெக இரண்டாம் ஆண்டு விழா கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழாவிற்கு ஏற்கெனவே அளவுக்கு அதிகமான அளவில் தொண்டர்கள் வந்ததால் அரங்கம் நிரம்பி வழிகிறது. பலர் இருக்கை இன்றி நின்றபடியே விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் விழாவினை காட்சிப்படுத்த வந்த குமுதம் செய்தியாளர் இளங்கோ மீது, அங்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள பவுன்சர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து தாக்கிய அந்த பவுன்சர் மன்னிப்பு கேட்கக் கூறி தவெக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் மற்ற செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தாக்கப்பட்ட செய்தியாளரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களுக்கு இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை பாதுகாக்கும் தவெக நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க மன்றம் உறுதுணையாக இருக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியும், இழப்பீடும் தர வேண்டும்! tvk vijay bouncers attack journalist
அதே போன்று இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜயின் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா பனையூரில் இன்று நடைபெற்று வரும் நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற குமுதம் ஒளிப்பதிவாளர் இளங்கோவை கடுமையாகத் தாக்கியுள்ளனர் விஜயின் பவுன்சர் படையினர்.
இது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த அநாகரிக செயலுக்கு விஜய் வருத்தம் தெரிவிப்பதுடன், மருத்துவ உதவியும், இழப்பீடும் தர இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் IFWJ வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக