ஞாயிறு, 19 ஜூன், 2022

ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுவை கைகழுவும் பாஜக ... கோபத்தில் வெங்கையா நாயுடு

தினமலர் : சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, தி.மு.க.,வின் பத்திரிகையான முரசொலி புகழ்ந்து தள்ளியது.
இது பலவித ஊகங்களைக் கிளப்பி விட்டது.ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு போட்டியிட்டால் தி.மு.க., ஆதரவளிக்கும் போலிருக்கிறது என செய்திகள் அடிபட்டன.
இந்நிலையில் ஒரு விஷயம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுவதோடு, சில தலைவர்களின் 'வாட்ஸ் ஆப்' பிலும் வலம் வருகிறது.
வெங்கையாவுக்கு இனி எந்த பதவியும் தரப் போவதில்லை என பா.ஜ., தலைமை முடிவு செய்துவிட்டதாக கூறப்படும் செய்தி தான் அது.
பதவி ஓய்வு பெறும் இவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்படும்.டில்லியின் எந்த பகுதியில் பங்களா வேண்டும் என விசாரிக்க, சமீபத்தில் வெங்கையா நாயுடுவை சந்தித்தாராம் ஒரு சீனியர் அமைச்சர். 'பிரதமர் என்னை அனுப்பி உங்களின் விருப்பத்தைக் கேட்டு வரச் சொன்னார்' என, அந்த அமைச்சர் சொன்னதும், வெங்கையா நாயுடு பொரிந்து தள்ளிவிட்டாராம்'கட்சியில் நான் தான் சீனியர். எனக்குத் தானே ஜனாதிபதி பதவி தர வேண்டும். தென் மாநிலங்களில் இருந்து, ஏன் யாரையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில்லை' என கோபப்பட்டு அந்த அமைச்சரிடம் பேசியுள்ளார். அதிர்ந்து போன அந்த அமைச்சர் பதில் சொல்லாமல் திரும்பிவிட்டாராம். நடந்த விஷயத்தை பிரதமர் மோடிக்கும் தெரிவித்துவிட்டார். இந்த விவகாரம் டில்லி அரசியல் வட்டாரங்களில் தீயாய் பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை: