புதன், 15 டிசம்பர், 2021

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு!

 Shyamsundar  -  Oneindia Tamil  :  சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ரெய்டை தொடர்ந்து இவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்து வருகிறது. முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில் சிக்கி வருகிறார்கள். அதேபோல் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகளும் ரெய்டுகளில் சிக்கி வருகிறார்கள்.
முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து தொடங்கிய ரெய்டு பின்னர் வரிசையாக வெவ்வேறு மாஜி அமைச்சர்களிடம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி அதிமுகவின் மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது. அதன்பின் கடைசியாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி பதவி ஏற்றத்தில் இருந்து முந்தைய ஆட்சியில் பல்வேறு புகார்களில் சிக்கியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரெய்டுகளை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தங்கமணி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை இவர் கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர். பல கோடி சொத்துக்களை இவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: