வியாழன், 3 டிசம்பர், 2020

மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கம் madrasradicals.com  : 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள். ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக பீகார், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்கள் மாறவில்லை என்றாலும், அவர்களது அரசியலுக்கு சார்பானவர்களாகவே இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வரலாறு அரசியலாகச் சொல்லப்போனால் மேற்கு வங்காளம் தனக்குள் பல வங்காளங்களைக் கொண்டுள்ளது. இந்தி மொழி பேசும் வங்காளத்தின் பகுதியானது வட இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் உருவானது. இந்தப் புலம்பெயர்தல் மிக நீண்ட வரலாறு கொண்டது. காலனி ஆட்சிக்காலத்திலேயே தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் முதலானோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை வங்கத்தை நோக்கி புலம்பெயரத் தொடங்குகிறது. 1960-ம் ஆண்டு வரை இந்த புலம்பெயர்தல் நிகழ்ந்து கொண்டிருந்தது. வங்காளத்தின் தொழிற்சாலைகள் 60-களின் காலகட்டத்தில் குறையக் குறைய, புலம்பெயர்தலும் கணிசமாகக் குறையத் தொடங்கியது. 

இருப்பினும் பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தனர். நிறைய புலம்பெயர் தொழிலாளர்கள் மூன்று, நான்கு தலைமுறைகளாகவே வங்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலைகள் நிறைந்த ஹௌரா,ஹூக்லி மற்றும் 24 பர்கானாக்களின் பகுதிகளிலும், நிலக்கரி வளம் நிறைந்த அசான்சோல்-ராணிகஞ்ச் பகுதிகளிலுமே வாழ்கின்றனர்.

சில புலம்பெயர் தொழிலாளிகள் வங்கத்தின் நகரங்களில் பலசரக்கு கடைகள் அமைத்து தேனீர், பான்மசாலா முதலியன விற்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் உண்மையில் இந்தி பேசுபவர்களாக இருந்தாலும் காலப்போக்கில் பல மொழி பேசுபவர்களாக மாறி, வங்க மொழியிலும் இயல்பாக பேசத்தொடங்கிவிட்டனர். வங்கத்திற்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானோர் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்பது கூடுதல் சுவாரசியம்.

பாஜகவின் வாக்கு வங்கியாக மாறிவரும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இப்படி புலம்பெயர்ந்த குழுமங்களில் இடதுசாரி அமைப்பினரால் வர்த்தக சங்கமாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களைத் தவிர வேறு யாருக்கும் பெரிதாய் அரசியல் சார்பு இருந்ததில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக தங்களின் சொந்த மாநிலங்களின் அரசியல் தன்மையால் உருவான பாதிப்பில் சிலர் மேற்கு வங்கத்தின் பா.ஜ.க வாக்கு வங்கியாக மாறி வருகின்றனர் என்பதை உணரமுடிகிறது.

தற்போது நரேந்திர மோடியைக் குறித்தும், பாஜக கட்சியைக் குறித்தும் வாழ்த்திப் பேசும் இயல்பையும் இவர்களிடம் காண முடிகிறது. இவர்களின் வாழ்விடங்களை மையப்படுத்தி தான் சிறிய அளவிலான ராமர் மற்றும் அனுமார் கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன, கட்டப்பட்டும் வருகின்றன. இந்துத்துவ கலாச்சாரத்தை காக்கப் போகிறோம் எனும் வட இந்திய பாஜக கருத்தியல் இவர்களிடமும் பரப்பப்பட்டு கணிசமானோர் அதன்பால் ஈர்க்கப்படுகின்றனர். பாஜகவின் மொழியும், அவர்களது முழக்கங்களும் அத்தொழிலாளர்களுக்கு சொந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை நினைவூட்டி, அவர்களை பாஜக-வின் வாக்கு வங்கியாக மாற்றுகிறது.

இதுவே பாஜகவுடனான நெருக்கமான உறவையும் சுலபமாக அம்மக்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது.

ராமர் கோயில்கள் கட்ட செலவு செய்கிறார்கள்

மிகப் பெரிய அறிஞரும், அரசியல் பேராசிரியருமான பார்த்தா சாட்டர்ஜி தனது அறிக்கையில் ராஜஸ்தானைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஒப்பீட்டளவில் வளமாகவும் பெரிய வியாபாரிகளாகவும் உள்ளனர். அவர்கள் தனது வருமானத்தில் கணிசமான அளவை சிறிய ராமர் கோவில்கள் கட்டுவதற்காக செலவு செய்கின்றனர் என்கிறார். ஆக வட இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரால் பாஜக எனும் கட்சி உருவாவதற்கும், வளர்வதற்கும் ஏற்ற கலாச்சார சூழல் அங்கு உருவாக்கப்படுகிறது. 

இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுடன் நீயுஸ் 18 செய்தி நிறுவனம் தொலைபேசியில் பேட்டி எடுத்தபொழுது, அவர்களில் பெரும்பாலானோர் பாஜக சார்புடையவர்களாக இருப்பதை உணர முடிகிறது. இருப்பினும் விளிம்புநிலை தொழிலாளர்கள் பெரும்பாலும் திரிணாமுல் காங்கிரசிடமும் இடதுசாரிகளின் பக்கமும் தான் இருக்கின்றனர். மேலும் சிலர் இரண்டு பக்கமும் சாராமல் மத்தியில் மோடி சிறப்பாக இருக்கலாம், ஆனால் வங்கத்திற்கு தீதி தான் (மம்தா) சிறந்தவர் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்

கருத்துகள் இல்லை: