hindutamil.in - வேட்டையன் : சென்னை: மத்திய பாஜக அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!” என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவின் கீழ் மசோதா நகலை தீயிட்டு எரித்த படத்தை பகிர்ந்துள்ளார்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாவுக்கும் ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்கு செலுத்தினர். மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவு கிடைக்காத காரணத்தால் மசோதா தோல்வி அடைந்தது.
“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?” என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசியிருந்தார்.
முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என தென் மாநில கட்சிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை அன்று கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக