ஞாயிறு, 15 ஜூலை, 2018

முட்டை ஊழலில் ப.சிதம்பரம், சசிகலா, எடப்பாடி கூட்டணி? ஐ.டி ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...

pc-sasi-epsநக்கீரன் -தாமோதரன் பிரகாஷ் :
வருமான வரித்துறை சரியாகத்தான் குறி வைக்கிறது. அதன் ரெய்டுக்குப் பிறகான நடவடிக்கைகள் மத்திய மோடி அரசின் விருப்பு-வெறுப்புகளை பொறுத்தே அமைகின்றன.
egg-corruptionசசிகலா குடும்பத்தினர், ப.சி. குடும்பத்தினர், கிறிஸ்டி புட் நிறுவனம் என ரெய்டுகளை நடத்திய வருமானவரித்துறையினர் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மோசடிகள் சிலவற்றையும் கண்டறிந்தனர். அதில் ஒன்று, சென்னைக்கருகே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் நெம்மேலியில் 86 ஏக்கர் நிலம் கிறிஸ்டி நிறுவனத்தின் கைகளுக்கு மாறியிருக்கிறது. தமிழகம் முழுவதுமுள்ள சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் நாமக்கல் நிறுவனமான 'கிறிஸ்டி'யின் கோக்குமாக்குகள் பலவற்றை நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.
1991-96 ஜெ. ஆட்சியில் மதுசூதனன் அமைச்சராக இருந்தபோது, சத்துணவுத் திட்டத்திற்கு சத்துமாவு சப்ளை செய்ய கிறிஸ்டி புட் நிறுவனம் முயற்சிக்கிறது. அப்போது பூந்தமல்லியில் இயங்கி வந்த கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க சத்துணவு மையங்களுக்கு சத்துணவு சப்ளை செய்ய ஆர்டரை மதுசூதனனின் உறவினர் ஜெ.பி. மூலம் பெறுகிறார். (இதை அப்போதே நக்கீரன் பதிவு செய்திருக்கிறது).
பின்னர் ஜெ. ஆட்சியில், சமூகநலத்துறை அமைச்சராக வளர்மதி இருந்தபோதும் கிறிஸ்டியின் முட்டை சப்ளை தமிழகம் முழுவதும் தொடர்ந்தது. எடப்பாடி ஆட்சி அமைந்ததும் பழைய உறவுகளின் மூலம் கிறிஸ்டி நிறுவனம் தொடர்ந்து முட்டை சப்ளை செய்து வருகிறது. அழுகிய முட்டைகளை சப்ளை செய்து, கமிஷன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களை சரிக்கட்டியதையும் நக்கீரன் அம்பலப்படுத்தியது.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சதீஷ்குமார் திருச்சியில் பணிபுரிகிறார். இவரது மனைவியும் ஹிமாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவி அயல் பணி நியமனமாக தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக மேலாளராக நியமிக்கப்படுகிறார். உணவு அமைச்சர் காமராஜ், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோர் தமிழகம் முழுவதும் சத்துணவு முட்டை விநியோகத்தை மேற்கொள்கின்றனர்.

இந்தியா முழுவதும் தனது வியாபாரத்தை பெருக்க நினைத்த கிறிஸ்டி நிறுவனத்தை கர்நாடக அரசு தரமற்ற சத்துமாவு சப்ளை செய்ததாக தடை செய்துள்ளது. அந்தத் தடையை விலக்கி கர்நாடகாவிலும் தமிழ்நாடு போல புகுந்து விளையாட ப.சி. குடும்பத்தை அணுகுகிறது கிறிஸ்டி நிறுவனம். கர்நாடகாவில் வேறு பெயரில் இயங்கி சித்தராமையா அரசில் கால் பதிக்கிறது. கிறிஸ்டியின் கர்நாடக ஆபரேஷன்களுக்கு ப.சி.யின் பணம் முதலீடாகிறது என வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடிக்கிறது.

minister-kamaraj-sarojaஇந்த அறிக்கையைப் படித்த பிரதமர் மோடி "கிறிஸ்டியின் நடவடிக்கைகளில் சசிகலா குடும்பத்திற்கு சம்பந்தமில்லையா?' என கேள்வி எழுப்புகிறார். சசிகலா குடும்பத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி மூலமாகவே கிறிஸ்டிக்கும் தொடர்பு இருந்தது என ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்துகிறது வருமானவரித்துறை. இப்படி ப.சி., சசிகலா என அரசியலின் இரண்டு எதிரிகளுடன் தொடர்பு கொண்டிருந்த கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் என ஆணையிடுகிறார் மோடி. நெம்மேலியில் உள்ள இடம் ப.சி., ஜெ.பி., கிறிஸ்டி நிறுவனம் என கை மாறியிருப்பதை அறிந்து, ஜெ.பி.க்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்க, அவரது வழக்கறிஞரான நளினி சிதம்பரம் லைனில் வந்துள்ளார். ஜெ.பி.யிடம் செல்போன் பாஸ்வேர்ட் என்ன என அதிகாரிகள் கேட்டபோது, "வக்கீலிடமே கேளுங்கள்' என்றாராம். அதேபோல் ப.சி.யிடம் ஏன் நிலம் வாங்கினீர்கள் என கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியிடம் கேட்ட கேள்விக்கான எழுத்துப்பூர்வமான பதிலை நளினி சிதம்பரத்தின் ஆலோசனைப்படி சுதாதேவி ஐ.ஏ.எஸ். தனது கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து தந்தார் என்கிறார்கள் அதிர்ச்சி விலகாத வருமானவரித்துறையினர்.


ஜெ.பி.யின் அலுவலகத்தில் நடந்த சோதனையின்போது, ஆவணங்கள் சிக்காமல் ஆரம்பத்தில் தவித்த வருமானவரித்துறையினர், பின்னர் அலுவலக ஊழியர்களின் உள்ளாடைகளை சோதனையிட்ட போது அதில் ஸ்பெஷல் பாக்கெட் தைக்கப்பட்டு, அதற்குள் பென் டிரைவ்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அத்துடன் மேலும் பல ஆவணங்கள், டாலர்களை கைப்பற்றிய வருமானவரித்துறையினர், ஜெ.பி. அங்கே வந்தபோது, "நீங்கள் போகலாம், எங்களுக்கு உங்களது கணினியிலிருந்து ஆவணங்கள் கிடைத்துவிட்டன. 36 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அமலாக்கத்துறை உங்களை விசாரிக்கும்'' என்றவர்கள், "அவரது அலுவலகத்தில் இருந்த கேமராக்களில் மு.க.ஸ்டாலினின் மருமகன் வந்து சென்ற பதிவுகளை பற்றி சில கேள்விகள் கேட்டோம்'' என்கின்றனர்.

ரெய்டின்போது சுதாதேவி ஐ.ஏ.எஸ். படுஉஷாராக இருந்துள்ளார் என்கிற அதிகாரிகள், "அவரது அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் வளர்மதி என்கிற சகோதரி மூலமாகவே செய்திருந்தார். அவரது வீட்டில் 2 கிலோ தங்க நகைகளை மட்டுமே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அவரது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் ப.சி.யின் நிலத்தை ஏன் வாங்கினேன் என கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமி வருமானவரித்துறைக்கு அளித்த பதில் டைப் செய்யப்பட்டிருந்தது. மற்ற விவரங்கள் அனைத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு அழித்திருந்தார். அவரது செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் மனு உருவாக்க சாஃப்ட்வேரை போட்டு மீட்டெடுத்து, அவரை மடக்கினோம்'' என்கிறார்கள். "கிறிஸ்டி புட் நிறுவனத்தில் 4 நாட்கள் ரெய்டு நடத்தினோம். அவர்களது கம்ப்யூட்டர்களை நெருங்க முடியவில்லை. அதன் பென் டிரைவ்களை ஒளித்து வைத்திருந்தார் அதன் மேலாளர் கார்த்திகேயன். அவரை லத்தி துணையுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தபோது, அவர் அலுவலகத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். வருமானவரித்துறையின் கடுமையை கண்ட மற்ற ஊழியர்கள் அலறிப்போய் நிறுவனத்தின் கழிவறைகளிலும் ஜன்னலின் உட்புறமும் கயிறு கட்டி ஒளித்து வைத்த சாவிகளை காட்டினர்.

அதில் ஒரு சாவி கிறிஸ்டி புட்ஸ் அலுவலகத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள வீட்டுக்கு உரியது. அந்த வீட்டின் கிணற்றில் ஆவணங்கள் பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. ஜன்னலில் கட்டப்பட்ட கயிறில் பென் டிரைவ்கள் சிக்கின. தற்கொலைக்கு முயன்ற கார்த்திகேயன் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் 8 கிலோ தங்கம் கிடைத்தது. மற்ற இடங்களில் 17 கோடி ரூபாய் பணம் மட்டுமே கிடைத்தது'' என்கின்றனர்.
"ரெய்டில் கிடைத்த ஆவணங்களில் மிக முக்கியமானது எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாயை கிறிஸ்டி புட் மூலமாக வெள்ளைப் பணமாக மாற்றிய ஆவணம். அதேபோல் கிறிஸ்டி புட் நிறுவனத்தில் ப.சி. முதலீடு செய்த ஆவணங்கள், அதனுடன் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி மூலமாக தமிழக சத்துணவு திட்டத்தில் முட்டை வினியோகத்தில் கோடி கோடியாக கமிஷன் பார்த்த ஆவணங்கள், இவற்றுடன் ஜெ.பி., ப.சி. மூலமாக கர்நாடகத்தில் கிறிஸ்டி செய்த வியாபாரம் தொடர்பான ஆவணங்கள் எனப் பட்டியலிடுகிறார்கள் அதிகாரிகள்.

jpரெய்டு பற்றி அக்னி நிறுவன தலைவர் ஜெ.பி.யிடம் கருத்து கேட்டபோது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், ப.சிதம்பரத்தின் மனைவியான வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தை தொடர்பு கொண்டோம். "உங்களது வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் போது நீங்கள் அக்னி நிறுவன தலைவர் ஜெ.பி.யிடம் நிலத்தை விற்றதாகவும் அதை கிறிஸ்டி நிறுவனம் வாங்கியதாகவும் வருமான வரித்துறை சொல்கிறதே?'' என கேட்டதற்கு, "அது தவறான தகவல்'' என்றார். "நீங்கள் ஜெ.பி.க்கு சொந்தமான அக்னி நிறுவனத்திற்காக வழக்கறிஞராக பணிபுரிகிறீர்களா?'' என கேட்டதற்கு "அதுவும் தவறான தகவல். நான் இது குறித்தெல்லாம் பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசுவதில்லை'' என்றார். ரெய்டில் தொடர்புடையவர்களின் விளக்கங்களை வெளியிட நக்கீரன் தயாராக உள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வருமானவரித்துறை ரெடியாகியுள்ளது. இந்த டீமுடன் தொடர்புடைய முன்னாள் உள்துறை செயலாளர் சையது முனீர் ஹோதா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோரிடமும் விசாரணை பற்றியும் அத்துடன் வெளிநாட்டில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பற்றியும் விசாரிக்கப்படும் என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை: