வியாழன், 19 ஜூலை, 2018

ஜாதி அமைப்பு ஆண்களையும் பெண்களையும் காட்டுமிராண்டிகளாக்கிக் களிக்கிறது.

. Kutti Revathi : மிக நீளப்பதிவு ஒன்றை எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று சிறுமி மீதான பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் வெவ்வேறு வயதுடைய அடித்தட்டுத் தொழிலாளர்கள்.
இவர்கள் மட்டும் தான் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்களா. இவர்கள் தாம் சமூகத்தில் மோசமானவர்களா. இவர்களை விட, யார் கையிலும் சிக்கிக்கொள்ளாமல் பாலியல் வன்முறையில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், உயர் சாதி, அதிகார வர்க்கம் கொண்டவர்கள்.
ஶ்ரீரெட்டி அம்பலப்படுத்துவது போல் சினிமாவில் மட்டும் தான் பாலியல் துய்ப்பில் ஈடுபடுகிறார்களா. இல்லை. ஒரு சினிமா இயக்குநர் கூறியது, என் காதில் விழுந்தது: வேண்டாம் என்றால் சொல்லிவிட்டு விலகிச்செல்ல வேண்டியது தானே. ஏன் அம்பலப்படுத்துகிறார்கள். இதன் வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கிறது, அழைப்பதில் ஒன்றும் வன்முறை இல்லையாம். ஶ்ரீரெட்டியும், சரியான ஆள் இல்லை. தனக்கு ஆண்கள் வழியாக ஆதாயம் கிடைக்காத போது தான் அம்பலப்படுத்துகிறார். எல்லா துறைகளிலும் இது நீக்கமற நிறைந்திருக்கிறது.
எனக்கு கமலாதாசின் கவிதைகள் நிரம்பப் பிடிக்கும் தொடக்கத்தில். ஆனால், காலப்போக்கில் தோன்றியது இது மாதிரியான, ஆதிக்கசாதிச் சூழலிலிருந்து வரும் பெண்கள் முன்வைக்கும் பாலியல் விழைவு என்பது, அவர் தம் சாதி அதிகாரத்திற்குக் கிடைக்கும் சலுகையே அன்றி வேறில்லை.
நடைமுறையில், இதை இன்னொரு சாதிப்பின்னணியில் இருக்கும் பெண்ணிற்கான வாதமாக, அரசியலாக ஒரு பொழுதும் மாற்றவே முடியாது. இந்தப் புரிதலுக்குப் பின், கமலாதாசின் மீது சுவாரசியம் போய்விட்டது.
சிவகாமி அவர்களுடன் இயக்கமாகப் பணியாற்றும்போது, உயர்சாதிப்பெண்கள் காதுபடவே சொன்னார்கள்: நாங்கள் எப்படி தலித் பெண்ணைத் தலைவியாக வைத்துப் பணியாற்றுவது என்று. இன்னொரு சமூகப்போராளி, 'அவர் அதை தலித் இயக்கமாக மாற்றமாட்டார் என்பது என்ன உத்திரவாதம்' என்று.
"To Kill a Mocking Bird', படம், கருப்பு இனத்தவருக்கும் வெள்ளை இனத்தவருக்கும் இடையிலான பாலியல் அதிகாரங்களில் இருக்கும் வேறுபாட்டைச் சித்திரிக்கும் படம். ஒரு வெள்ளை இனப்பெண், கருப்பர் இன ஆண் தன்னைப் பாலியல் வன்முறை செய்யமுயற்சி செய்தாக ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவர். ஒரு வெள்ளை இன ஆண் தான் அந்தக் கருப்பர் இன ஆணிற்காகப் போராடுவார். நடந்தது என்னவென்றால், அந்தப்பெண் தான் அந்தக் கருப்பு ஆணை வற்புறுத்தியிருப்பார். அந்த ஆண் இணக்கம் காட்டாதபோது, அந்தப் பெண்ணும், அந்தப்பெண்ணின் கணவனும், அந்த ஆணின் மீது தமக்கே உரித்தான இன வெறுப்பைக் காட்டி வழக்காக்குவார்கள். அவனைச் சுட்டுக் கொல்வார்கள்.
இந்தியப் பெண்ணியத்தில், ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இடையில், அவர்கள் யார் இருவர் என்றாலும் சாதியச் சுவர் இருக்கிறது. மாமியார் மருமகளுக்கு இடையில் இருப்பது போல வலுவான சுவர். ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணைச் சந்தேகிக்காமல், பொறாமை கொள்ளாமல் இருக்கவே முடியாது. எந்தக் கீழ்நிலையில் உள்ள பெண் என்றாலும், 'சாதி வழியாக உனக்குக் கிடைத்த சொற்ப அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்' என்று எந்த ஒரு பெண்ணையும் மூளையின் பின்னிருந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கும் தன்மை உடையது, சாதி. அதில் உயர்சாதிப் பின்னணியிலிருந்து வந்த பெண் என்றால் கேட்கவே வேண்டாம். கொஞ்சம் உயர்ந்த சாதிப் பின்னணி என்றாலும்.
ஆண்களின் உலகிற்கு வருவோம். பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்களுக்கு நன்றாகத் தெரியும், இது தண்டனைக்கு உரியது என்று. தண்டனைக்கு உரியது என்றாலும், அவர்கள் அது குற்றம் இல்லை என்பதாகத் தான் உள்வாங்கிக் கொள்கிறார்கள். சினிமாவில், குடும்பத்தில், பொதுவெளியில் மீண்டும் மீண்டும் அங்கச் செயல்பாடுகளால் திணிக்கப்பட்டு, திணிக்கப்பட்டு அதைச் செய்வதில் குற்றம் ஒன்றும் இல்லை என்பதாகத்தான் உணர்கிறார்கள். பெண் மீதான பாலியல் துய்ப்பு குறித்து குற்றவுணர்வு கொண்ட ஓர் ஆணை இதுவரை சந்திக்கவில்லை, நான். "தண்டனைக்கு உரியது என்றாலும் குற்றம் இல்லை". இந்த உளவியல் பின்னணியில் தான், பெண்கள், மரண தண்டனையும் உறுப்பைச் சிதைத்தலும் இந்தக் குற்றத்தைக் குறைக்கும் என்று நம்புகிறார்கள். வேடிக்கையானது.
இந்தியாவில் கருப்பு நிற, ஒடுக்கப்பட்ட ஆண்களின் நிலை இன்னும் மோசமானது. இவர்களுக்கு உயர்சாதி ஆண்களின் குற்றவுலகம் நன்கு அறிமுகமானது, வியப்பானது. நிறைய இந்தித்திரைப்படங்கள், செய்தித்தொடர்கள், சீரியல்கள் என எல்லாவற்றையும் பார்த்து, தம்மால் அத்தகைய உயர்ந்த குற்றங்களைச் செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் தான் இதையெல்லாம் செய்ய உந்தப்படுகிறார்கள். இவர்களுக்கு அச்சுறுத்தலாய் இருப்பது வெள்ளை நிற ஆண்களுக்குக் கிடைக்கும் குற்றம் செய்யும் வாய்ப்புகள். பெண்கள் எழுதுவது போன்ற, ஈவு இரக்கம் அற்றவர்கள், வஞ்சகர்கள் போன்ற வெறும் சொற்கள் எல்லாம் இந்தியாவின் சாதிய இழிநிலையைப் புரிந்துகொள்ளாத நிலையிலிருந்து வருவது.
நான் அறிந்தவரை, மனிதர்கள் குற்றம் இழைப்பதில், இன்னொருவரிடம் தம் ஆதிக்கத்தைக் காட்டுவதில் அதிக அதிகமாய் இன்புறுகிறார்கள். அதிலும், இன்றைய இணையவெளி பரவலாக்கத்திற்குப் பிறகு தன்னுடைய உடல் என்பதும், காமம் என்பதும், காதல் என்பதும் எவ்வளவு பெரிய வியாபாரச்சரக்கு என்பதை அவரவர் அறிந்தே இருக்கிறோம். பெண்ணோ, ஆணோ எல்லோராலும் தன்னை விற்கமுடியும் சந்தை இந்த உலகம். வாய்ப்புகள் கிடைக்காமல் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று எல்லோரையும் போல நானும் நினைக்கவில்லை. எல்லோரும் சரியான ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். அல்லது, தங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டும் சிக்கிக் கொள்ளாதவர்கள்.
இந்தியாவின் சாதி இப்படி ஆண்களையும் பெண்களையும் காட்டுமிராண்டிகளாக்கிக் களிக்கிறது. இதற்காகத் துன்புற்று வருந்துபவர்கள் எல்லாம் கூட இன்னும் சிறிய காலத்தில், மனப்பிறழ்வுக்கு ஆளாவார்கள் என்று சொல்லலாம்.

கருத்துகள் இல்லை: