திங்கள், 16 ஜூலை, 2018

கனிமொழி : கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டுவருவதே காமராஜருக்கு செய்யகூடிய கைம்மாறு

மாநில பட்டியலில் கல்வி: கனிமொழிமின்னம்பலம்: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே
காமராஜருக்குச் செய்யக்கூடிய கைமாறு எனக் கனிமொழி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணித் தலைவருமான கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து சட்டமாக்கியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்காகக் கல்வியை உயர்த்திப் பிடித்த மிக முக்கியத் தலைவர் காமராஜர். அவர் இல்லையென்றால் மத்திய உணவுத் திட்டம் என்பதே இல்லாமல் போயிருக்கும். இந்தச் சமூகம் முன்னேறுவதற்குக் கல்வி ஒன்றுதான் வழி என்பதைத் தெளிவாக புரிந்துகொண்ட தலைவர் காமராஜர்.
ஆனால், இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஆட்சியில் நமது உரிமைகளை, குழந்தைகளின் கல்வி சூழலை இழந்துகொண்டு இருக்கிறோம். மத்தியில் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். இதுவே நாம் அவருக்குச் செய்யக்கூடிய கைமாறு.

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது என்பது என்றைக்கும் சாத்தியமில்லாத ஒன்று. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலை” என்று தெரிவித்தார்.
“தினமும் ஓர் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. முதல்வர் மீதே ஊழல் குற்றம்சாட்டப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: