ஞாயிறு, 15 ஜூலை, 2018

வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை மாலைமலர் :தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேலம்: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.  இந்த நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.


இதனை தொடர்ந்து மேட்டூர் அணை முதல் எடப்பாடி வரை காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இதேபோன்று ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காவிரி கரையோர மக்களின் நலன் கருதி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

பொது மக்கள் அவரச உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: