இதை தாண்டியும் பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வந்தனர். பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வர கூடாது என போலீசு தடுத்தது. தோழர்கள் பேசி வர வைத்த போது, நாளைக்கு பள்ளிக்கு வா! போட்டோ எடுத்துள்ளேன், தொலைத்து விடுவேன் என்று போலீசு மிரட்டியது. எங்களிடம் உன் பாச்சாவெல்லாம் செல்லாது என உற்சாகமான மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்தது குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் என்பதால் பேருந்து நிலையத்தில் அதிகமான மக்கள் நின்று கவனித்தனர். வாகனங்களில் செல்பவர்கள் நின்று கேட்டுவிட்டு சென்றனர். கடை வீதி என்பதால் வியாபாரிகள், பொது மக்கள் என பலர் கவனித்தனர். போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! அனைவரையும் நின்று கவனிக்க வைத்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமை உரையில் மெரினா கடற்கரையில் மாணவர்களின் போராட்டத்தை எப்படி அரசு ஒடுக்குகிறது என்பதுதான் முக்கியம் .போராடிய பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. ஓடி தஞ்சம் புகுந்த வீடுகளை உடைத்து போலீசு தாக்கியது. எதிரி நாட்டு படைகள், ஊருக்குள் புகுந்ததைப்போல போலீசு அட்டூழியம் செய்தது. போலீசு கேட்கிறது “மக்களும் தான் எங்களை தாக்கினர்” அதற்காக எங்களைப் பற்றி பேச மாட்டீர்களா? என்று கேட்கின்றனர். மக்கள் போலீசை தாக்கியது என்பது தற்காப்பு தாக்குதல் தான். காவல்துறையை சேர்ந்தவர்களே உங்களை உங்கள் மேல் அதிகாரி தாக்க சொன்னால் எங்கள் சகோதர சகோதரிகளை அடிக்க முடியாது என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
கார்த்திகேயன் – மக்கள் கலை இலக்கிய கழகம்
சிங்கம் 3 படம் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. போலீசு பற்றி மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். இப்போ வெளிவந்தால் படம் ஊத்திக்கும் என்று தள்ளி போட்டுள்ளனர். ஒரு போலீசு அடிவாங்கியதை போல அவர்களே ரெடி செய்து வாட்ஸ்அப் பில் அனுப்புகின்றனர். இது பற்றி அந்த போலீசே இது ஓவர் தான் என்கிறார். இனி போலீசு ராஜ்ஜியத்தை ஒழித்து மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் .
அஜிதா – பெண்கள் விடுதலை முன்னணி – இணை செயலாளர், சென்னை
பி. சுகுமார் – சி.பி.ஐ – மாநில குழு உறுப்பினர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
போலீசை கண்டித்து இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சமூகத்தில் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. காவிரி, பணமதிப்பிழப்பு நீக்கம், வேலையில்லா திண்டாட்டம் வரை நாம் போராடிய வேண்டிய பிரச்சனை நீள்கிறது.
காக்கிச்சட்டை அணிவதற்கு முன்பு மனிதர்களாகத்தான் உள்ளனர், அணிந்த பின்பு தான் மாறுகின்றனர். திருமண வீட்டில் சீப்பை ஒளித்து விட்டால், திருமணம் நின்றுவிடும் என்று நினைத்தது போலீசு.
தனது மகன், தனது அண்ணன், தனது பேரன் என்றுதான் தமிழக மக்கள் அடிப்பட்டவர்களுக்காக போலீசை எதிர்த்து போராடினார்கள். இந்த போராட்டத்தில் சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, எவ்வித வேறுபாடும் இல்லை. 200 பேரை கைது செய்தது போலீசு, ஆனால் 47 பேர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மீதி பேர்கள் எங்கே? அவர்கள் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
பிரின்ஸ் என்னரசு பெரியார் – திராவிடர் கழகம், மாநில இளைஞரணி செயலர்
என்னதான் அமைதிப்போராட்டமாக இருந்தாலும், ஒரு ஸ்டண்ட் சீன் இல்லையானால் முழுமைபெறாது என்று போலீசு மக்களை அடித்தது. போராட்டம் என்பது ஜாலியாக இருக்காது அடிதடியாக தான் இருக்கும் என மாணவர்களுக்கு பாடம் கற்பித்த போலீசுக்கு நன்றி. போலீசு இரண்டு காமிராக்களை வைத்து வீடியோ எடுக்கின்றது. ஆனால் 1000 கேமாராக்கள் அவர்களை வீடியோ எடுத்தது அவர்களுக்கு தெரியாது. போலீஸ்காரர்கள் மனநோயாளியை போல இரவில் பார்த்த வாகனகளையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதை இரண்டு பெண்கள் மாடியில் இருந்து படம் பிடித்தார்கள். இப்படிதான் பலர் போலீசின் அட்டூழியங்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்தனர்.
கருப்பு சட்டை எங்கள் பக்கம், சிகப்பு சட்டை எங்கள் பக்கம், காக்கி சட்டை எங்கள் பக்கம் என கோஷம் போட்டவர்களை தான் அடித்தது போலீசு. இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமா? இல்லை. தண்ணீர் எப்படி 100 டிகிரி கொதிநிலையில் ஆவியாகுமோ? அதுபோல 100-வது டிகிரியாக ஜல்லிக்கட்டு பிரச்சனை. யார் சமூக விரோதி? ஆரியமே சமூகம், ஆரியர்களே மக்கள் என்றால், நாங்கள் சமூக விரோதிகள் தான். மக்கள் போராட்டம் ஒன்றே அனைத்துக்கும் தீர்வு என்று பேசினார்.
முனுசாமி – சி.பி.ஐ(எம்.எல்) – மாநிலக் குழு உறுப்பினர்.
மெரினாவில் போலீசு நடத்திய வன்முறைக்குப் பின்னரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராடிய மக்கள் மீது போலீசு அடக்குமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை மக்கள் போராட்டத்தின் மூலம் தான் வெல்ல முடியும்.
ராஜூ – மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர்
போராடுபவர்களை போலீசு தாக்குவது புதிதல்ல. வழக்கறிஞர்கள் போராட்டத்தில் நீதிமன்றத்திலேயே ஆறுமுகம் என்ற நீதிபதியை அடித்தனர். உன்னை பார்த்தால் நீதிபதி மாதிரி தெரிவில்லையே என்று கூறி போலீசு நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் அடித்தது. போலீசை பற்றி நாம் சொல்வது வேறு, போலீசே தன்னை நல்லவன் என்று சொல்வதில்லை. சிங்கம் சூர்யா போல ,வேட்டையாடு விளையாடு கமல் போல போலீசு ரொம்ப நல்லவன் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? இந்த குமணன்சாவடி எஸ்.பி ரொம்ப நல்லவர் லஞ்சம் வாங்க மாட்டாரு என்று நாம் சொன்னால் மக்கள் நம்புவார்களா?
பிழைப்பு தேடி ஆந்திராவிற்கு போகிறவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள், டெல்லிக்கு போகிறவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள். கேரளாவிற்கு போகிறவர்கள் மலையாளம் பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் யாருக்காவது பேச தெரியுமா? சொல்லி கொடுக்க கூடாது என்று வைத்துள்ளான். நம்மவர்கள் இரண்டு வார்த்தை மட்டும் சுவாகா, நமகா மட்டும் கற்றுள்ளனர். இந்த புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருததிற்கு பல கோடி ஒதுக்கீடு. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
போலீசை ஏவியது தமிழ்நாடு அரசு அல்ல, மோடி அரசு தான். இங்கு மக்களின் கொந்தளிப்பை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் ஒரு மாணவனை சுற்றி எல்லா பாதுகாப்போடும் உள்ள அதிரடிப்படை போலீசு தாக்குகிறது. ஒரு மீனவ பெண் கேட்கிறார். “உனக்கு தைரியமிருந்தால் ஒண்டிக்கு ஒண்டி வாடா” என்கிறார். பத்து பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரமா? கோழைத்தனம்.
“தோழர் என்று பேசினால் போனை கட் செய்து விடுங்கள்” என்று கோவை கமிஷனர் பேசுகிறார். போலீசு பயிற்சியில் இது தான் கற்று தருகிறார்களா? இல்லை இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தான் கற்று தர படுகிறது. எல்லாரும் சமம். போலீசை எதிர்த்து போராடினாலும் அனுமதி தரவேண்டும் என்று தான் சட்டத்தில் உள்ளது. அது தான் ஜனநாயகம். யாரோ பின்லேடன் படத்தை வைத்திருந்தார், ஜனவரி 26-ஐ கருப்பு நாளாக அனுசரிப்போம் என அட்டை வைத்திருந்தனர் என கூறி மக்கள் அனைவரையும் அடிப்பதற்கு போலீசு காரணம் கூறுகிறது.
போலீசை கண்டு அஞ்சி போராட்டம் ஓயாது. அது நெருப்பை பொட்டலம் கட்டுவதைப் போல கொள்கைக்காக போராடுபவர்களை கூலிக்காக அடிப்பவர்களால் ஒடுக்க முடியாது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக