வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

நடராஜன் லெக்சஸ் கார் விவகாரம் பிடி இருக்கிறது

சொகுசு கார் இறக்குமதி வழக்கு  நடராஜன் மீதான பிடி இறுகுகிறத சென்னை:வெளிநாட்டில் இருந்து, சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து, அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில், சசிகலா கணவர் நடராஜன் மீதான பிடி இறுகுகிறது. விசாரணை, 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன்; லண்டனில் இருந்து, 'லெக் சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், 1994ல் வெளியான புதிய ரக கார் என, தெரிய வந்தது. வரி ஏய்ப்பு மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய தாக, நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன்
தொழில திபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின், அபிராமபுரம் கிளை மேலாளர் சுசுரிதா ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. தொழில திபர் பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். அதனால்,நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த, எழும்பூர் நீதிமன்றம், நடராஜன் உட்பட நான்கு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2010ல் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, நான்கு பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர். தண்டனையை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே,சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தில், மத்திய அமலாக்கத்துறையும், தனியாக வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, எழும்பூர் நீதிமன்ற விசாரணை யில் இருந்து வந்தது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, நடராஜன் உட்பட நால்வரும் மனு தாக்கல் செய்தனர். மனுவை, எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து,  2016 டிச., 22ல் உத்தர விட்டது. தற்போது, இவ் வழக்கில் விசாரணை துவங்கி உள்ளது. நேற்று, இந்த வழக்கு, எழும்பூர் பொருளாதார குற்ற வழக்கு நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் மாலதிமதி முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஜானகிராமன், குற்றம் சாட்டப்பட்டுள்ள நடராஜன், வி.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் வரி ஏய்ப்பு செய்தற்கான ஆதாரங்களை அளித்தார். அதற்கு, நடராஜனின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட், விசாரணையை, வரும், 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்; அன்றைய தினம், வேறு சாட்சியங்கள் இருந்தால், அதையும் தாக்கல் செய்யலாம் என, உத்தரவிட்டார்.தினமலர்

கருத்துகள் இல்லை: