வியாழன், 8 டிசம்பர், 2016

முழு அதிகாராமும் எனக்கு வேண்டும்! சசியின் ஸ்டாண்ட் ( நாடு எக்கேடு கேட்டால்தான் என்ன?)

பல சிக்கல்களுக்கு இடையில் பன்னீர் முதல்வர் ஆனாலும்கூட அவருக்கு முள் மீது நிற்பதைப் போலத்தான் இருக்கிறதாம் முதல்வர் நாற்காலி. காரணம், தொடர்ந்து மிரட்டல்கள் வந்தபடியே இருப்பதுதான்! ஆனால், முதல்வரோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்கிறார்கள். ‘அம்மா உயிரோடு இருந்தபோதே அவரால் இரண்டு முறை முதல்வராக நியமிக்கப்பட்டவன் நான். எப்போதும் அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவனாகத்தான் நான் நடந்து (நடித்து) கொண்டிருக்கிறேன். அம்மா வளர்த்த கட்சியை எந்தக் காரணத்துக்காகவும் யார் மிரட்டலுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அது சிதைந்து போகவும் விட மாட்டேன்’ என்று தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லி வருகிறாராம் முதல்வர் பன்னீர்.
சசிகலா குடும்பத்தைப் பொருத்தவரை இன்னும் பன்னீர் முதல்வர் ஆனதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. சசிகலா குடும்ப உறவுகள் அத்தனையுமே அதைத் தொடர்ந்து சசிகலாவிடம் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, கார்டன் பக்கமே வரக்கூடாது என ஒதுக்கி வைத்திருந்தவர்கள் எல்லாம் இப்போது கால் மீது கால் போட்டு உட்கார்ந்து அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்”

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றினையும் அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
“முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு முழுமையாக வர வேண்டும் என சசிகலா நினைக்கிறார். அப்போதுதான் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என சசிகலாவின் அட்வைஸர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதனால் சசிகலாவின் டார்கெட் இப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என்பதில்தான் இருக்கிறது. பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்றால் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பக்கூடாது. மொத்தமாக செயற்குழு உறுப்பினர்கள் 200 பேர், பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், நகர செயலாளர்கள், தலைமை நிலைய பொறுப்பாளர்கள் என 1,200 பேர் உள்ளனர். மொத்தம் 1,400 பேர். இவர்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்போதும். பொதுச்செயலாளர் ஆவதில் எந்த சிக்கலும் இருக்காது. எல்லோரையும் எப்படி சமாளிப்பது என்ற கேள்வி அடுத்து எழும். சிலர் தனக்கு எதிராக காய் நகர்த்தி வருவதையும் சசிகலா உணராமல் இல்லை. அதை சமாளிக்க சசிகலாவின் அட்வைஸர்கள் அவருக்கு சில ஐடியக்களை கொடுத்து வருவதாகச் சொல்கிறார்கள். ‘அந்த 1400 பேர்கிட்டயும் நீங்க பேசணும். இப்போதைக்கு எல்லோரையும் நேரில் அழைத்து பேச முடியாது. சலசலப்பு வரும். அதனால் 1,400 பேருக்கும் நீங்க போனில் பேசணும். அப்போது, அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்தபோது, சொன்னதாக சில விஷயங்களை அவர்களிடம் நீங்க உருக்கமாக சொல்ல வேண்டும். இதுதான் அம்மாவின் விருப்பம் என்பதையும் நீங்க சொல்ல வேண்டும். அப்படி நீங்களே அவங்களோடு பேசினால், அது அம்மாவே பேசின மாதிரிதான் எல்லோரும் நினைப்பாங்க. எத்தனை பேரு சொன்னாலும் அவங்க மாற மாட்டாங்க. 1,400 பேருக்கு போன் பேசறது பெரிய விஷயம் இல்லை. அதிகபட்சம் இரண்டு நாளில் பேசிடலாம். ஒரு ஆளுக்கு ஒரு நிமிஷம் ஆகும் அவ்வளவுதான்!’ என்று சொல்லியிருக்கிறார்கள் அட்வைஸர்கள். ஆனால், சசிகலா இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்”

கருத்துகள் இல்லை: