புதன், 20 ஏப்ரல், 2016

கலப்புத் திருமணம் ஆனால் காதல் திருமணம் அல்ல. பெரியார் புரட்சியின் புது வேகம்!

12837216_1153885451288479_1516261225_oவே.மதிமாறன்: ‘கண்டிப்பா ஜாதி மறுப்புத் திருமணம் தான் செய்யணும். அதுவும் இடைநிலை ஜாதியோ அதற்கு மேல் உள்ள ஜாதிகளுடன் கூடாது. நிச்சயம் தலித் பெண்ணைத்தான் திருமணம் முடிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்து, சிறப்பாகத் தன் திருமணத்தை நடத்திக் காட்டினார் விஜயபாஸ்கர்.
இது காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு. காதலில் ஜாதி மறுப்பு தற்செயலாக நிகழ்ந்து விடும். அதை ஜாதி உணர்வாளர்கள் கூடச் சாதாரணமாக நிகழ்த்தி விடுவார்கள்.
ஆனால் இந்தத் திருமணம் திட்டமிட்டு ஜாதியை எதிர்த்து, புறக்கணித்து நடந்த திருமணம். அதுவும் ஜாதி கணகணவென்று எரிந்து கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 8.7.2015 அன்று நடந்தது. மணமகள் காயத்திரி சென்னை. (படங்கள் இப்போதுதான் கிடைத்தது)

அதில் இன்னுமொரு சிறப்பு, ‘ஜாதி உணர்வு தீவிரமாகக் கொண்ட தன் குடும்பம், ஊர் மக்கள் மத்தியில் தான் நடக்க வேண்டும்’ என்று அதை நிகழ்த்தியது. மணமகனின் பெற்றோர்கள் திருமணத்தைப் புறக்கணித்தனர்.
12837212_1153885261288498_572620592_oஆனால், ஊர் மக்கள் விஜயபாஸ்கர் மீது கொண்ட அன்பினால் கலந்து கொண்டனர். தனது ஊர் மக்களின் நலனில் அக்கறை கொண்டவன் விஜயபாஸ்கர் என்பதினால்.
ஆனாலும் ஆரம்பத்தில் துக்க வீட்டுக்கு வந்ததைப் போல் இருந்தவர்கள், பிறகு ஜாதி குறித்தும் பெரியாரின் சுயமரியாதை திருமணம் குறித்தும் பேசியதைக் கேட்டு, மெல்ல கல்யாண வீட்டின் கலகலப்பிற்கு வந்தார்கள். பெரியாரின் வெற்றி இதுதான்.
திருமணத்தைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நடத்தி வைத்தார்.
சூழலை புரிந்து கொண்டு, மணமகளும், மணமகளின் குடும்பத்தாரும் நடந்து கொண்ட விதம் மிக, மிகச் சிறப்பானது. மணமகளுக்கு ‘மணமகள் அலங்காரங்கள்’ பிடிக்காதபோதும் அந்தச் சூழலுக்காக பொறுத்துக் கொண்டார்.
மணமகள் குடும்பம் திராவிடர் கழகம். அங்கும் பெரியார் தான் இருக்கிறார்.
ஜாதி வெறியர்கள் எவ்வளவு ஊளையிட்டாலும், பெரியார் எதிர்ப்பாளர்கள் எவ்வளவு இழிவான நாடகம் நடத்தினாலும்,
காலத்தைத் தாண்டி ஜாதிக்களுக்கு எதிராக இளைஞர்களிடம் எப்போதும் நிற்பான் அந்த 139 வயது இளைஞன்.

கருத்துகள் இல்லை: