//இந்த முதலாளித்துவத்தால்தான் மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது. ஆகவேதான் இப்போது எல்லா தொழிலிலும் கடும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. //
எனவே தொழிலாளர் பற்றாக்குறை பற்றியும் பேசுவது இங்கே அவசியமாகிறது. தொழிலாளர் பற்றாக்குறை பல காரணங்களை உள்ளடக்கியது, அதற்கான காரணங்களில் இப்போதிருக்கும் உற்பத்தி முறையும் ஒன்று.
திருப்பூர் பொருளாதாரம் ஆட்டம் காணத்துவங்கிய 2010-ம் ஆண்டில் வெளியான ஃபிரண்ட்லைன் இதழின் கட்டுரையொன்றில் இந்தியாவில் அதிகம் தற்கொலைகள் நிகழும் நகரமாக திருப்பூர் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த தகவல் எனக்கு தெரிந்த பல நிறுவன அதிபர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரேயொருவர் மட்டும் அந்த கட்டுரையின் நகலை கையில் வைத்துக்கொண்டு பழைய தினமலர் நாளிதழ்களில் இருந்த தற்கொலைச் செய்திகளை திரட்டிக் கொண்டிருந்தார் (உதவிக்கு ஒரு மேலாளரும்). என் கண்களை என்னாலேயே நம்ப இயலவில்லை. நான்கு ஆண்டுகால பழக்கத்தில் அவர் நூல் விலை தவிர்த்த எந்த செய்தியையும் படித்து பார்த்ததில்லை.
அவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள எஸ். ஆலிவர் எனும் ஜெர்மானிய இறக்குமதியாளர், அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் உங்கள் தொழிற்சாலையில் இருக்கிறதா எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். அவர் அதற்கான பதிலை தனது நிறுவனத்தில் இருக்கும் தரவுகள் வாயிலாக தேடுவதற்கு பதிலாக தினமலரில் தேடிக் கொண்டிருந்தார்.
ஃபிரண்ட்லைன் கட்டுரையின் சாரம்சம் இதுதான் “அதிகரித்திருக்கும் விலைவாசியை சமாளிக்கும் அளவுக்கு ஊதியம் இல்லை. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் திருப்பூரில் வேலை குறைவாக இருக்கிறது. இதனால் உருவாகும் குடும்ப மற்றும் பொருளாதார சிக்கல்களை பின்னலாடைத் துறையின் மோசமான பணியிடங்கள் இன்னும் தீவிரமாக்குகின்றன. இதன் காரணமாகவே திருப்பூரில் தற்கொலைகள் அதிகரிக்கின்றன.”
2010-ம் ஆண்டு திருப்பூரின் நிலையை பரிசீலிக்கலாம். அந்த ஆண்டில் அங்கே எல்லா இடத்திலும் ஆட்கள் தேவை எனும் அட்டைகள் தொங்க விடப்பட்டிருந்தன. அதே சமயத்தில்தான் திருப்பூரில் இருந்து வெளியேறும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது. இந்த முரண்பாட்டிற்கான காரணத்தை அங்கே பணியாற்றியவர்களால் மட்டுமே அவதானிக்க முடியும். அப்போது எங்கள் பார்வை வட்டத்தில் இருந்த பல நிறுவனங்களில் இரவு 8 மணியோடு வேலை நிறுத்தப்பட்டது. சிங்கர் காண்ட்ராக்ட் எனப்படும் ஒரு பிரிவினருக்கு வாரத்தில் சில நாட்கள் வேலையில்லாமல் போனது (சிங்கர் – வீடுகளில் பயன்படுத்தப்படுவதையொத்த சக்தி வாய்ந்த தையல் எந்திரங்களை குறிப்பிடும் பொதுவான சொல். இந்தவகை எந்திர வேலைக்கான கூலி தைக்கும் ஆடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தரப்படும்). சிறு தையற்கூடங்களுக்கு தரப்பட்ட உப ஒப்பந்தங்கள் கணிசமாக குறைக்கப்பட்டது.
பெங்களூரை எடுத்துக்கொள்ளலாம், இங்கேயும் தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் இருக்கும் பொம்மனஹள்ளி வட்டாரத்தில் உள்ள ஜாக்கி நிறுவனம் ஒரு ஆண்டாக தங்கள் கிளையை சும்மா வைத்திருந்தது. வந்த 30 பேரை பேருந்து வைத்து இன்னொரு ஆலைக்கு பணிக்கு கூட்டிச்சென்றார்கள். அதே ஜாக்கியும் ராதாமணி எனும் ஆலையும் தொழிலாளர்களைக் கவர மதிய உணவை இப்போது வழங்குகின்றன. இங்கே சிக்கல் சற்றே வித்தியாசமானது. கடந்த சில ஆண்டுகளாக புதிய ஊழியர்களின் வரவு ஆடைத்துறையில் கணிசமாக குறைந்திருக்கிறது. அதிக அளவில் உருவாகும் பெரிய மற்றும் நடுத்தர அங்காடிகளுக்கான தொழிலாளர் தேவை நேரடியாக ஆயத்த ஆடைத்துறையை பாதிக்கிறது.
வேறு சில பொதுவான காரணங்கள் இருக்கின்றன. மிகக்கடுமையான வேலை காரணமாக தொழிலாளர்கள் தங்கள் உடல் வலுவை விரைவாக இழக்கிறார்கள் (2009 வரை நள்ளிரவு 1 மணிவரை வேலையென்பது திருப்பூரில் சாதாரணம். ஞாயிறு என்றால் மாலை 5 மணி வரை. தீபாவளி மற்றும் பொங்கலுக்கு மட்டுமே பாய்லரை நிறுத்திய ஆலைகள் இங்கே அனேகம்). இதனால் வேலைக்கு தகுதியற்றவனாகி வெளியேறும் நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். கூடுதலாக இந்த பணிச்சுமை போதைப் பழக்கத்தை நோக்கி பலரை தள்ளுகிறது. சாராயம் களைப்பை போக்கவும் பான்பராக் தூக்கத்தை விரட்டவும் இங்கே பலருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் வேலைத்திறன் குறைந்து பணியாற்றத் தகுதியற்றவர்களாகிறார்கள் சிலர். இப்போது இதன் தாக்கம் அத்தனை மோசமாக இல்லை என்றாலும் இன்னும் சில ஆண்டுகளில் பூதாகரமாகும் சாத்தியம் பரிபூரணமாக உள்ளது.
மேலை நாடுகளில் உள்ளதுபோல உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு கௌரவமான ஊதியமோ சமூக அந்தஸ்தோ இங்கு கிடையாது. ஆகவே எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் ஒரு அலுவலகப் பணிக்கு செல்பவர்களாக இருக்கும்படியே தயாரிக்கிறார்கள். இதை வைத்துத்தான் ஏழை மக்களிடம் ஆங்கிலப் பள்ளிகள் கல்லா கட்டுகின்றன. இதன் காரணமாக புதியவர்களின் விருப்பத் தெரிவாக தொழிற்சாலைப் பணிகள் இருப்பதில்லை.
இப்படியான பல்வேறு காரணங்களின் கூட்டுப் பங்களிப்புதான் தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்குகின்றனவேயன்றி அவர்களது வாழ்கைத்தரம் அல்ல. உலகின் சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளில் பாதி இந்தியாவில்தான் இருக்கின்றன எனும் செய்தியை தாராளமயத்தின் சுவிசேஷகர் மன்மோகனே ஒத்துக்கொண்டாயிற்று. எனவே தொழிலாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி அவர்களது வாழ்க்கை தரத்தை மதிப்பிடுவது அவர்கள் உழைப்பை சுரண்டுவதற்கு இணையான மோசடி.
- வில்லவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக