ஞாயிறு, 3 மார்ச், 2013

Delhi பள்ளி மாணவி பலாத்காரம் வெளி நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை

புதுடில்லி: "டில்லியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், வெளி நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. மாணவியைப் பற்றி நன்கு தெரிந்தவர் தான், இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்க வேண்டும்' என, போலீசார், சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
டில்லி, மாங்கோல்புரி பகுதியில் உள்ள, மாநகராட்சி பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவன், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த சம்பவம், அந்த பகுதியில், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், சிறுமி சிகிச்சை பெற்று வந்த, மருத்துவமனை முன், நேற்று முன்தினம் திரண்டனர். அந்த வழியாக சென்ற வாகனங்களை, அடித்து நொறுக்கினர். கடைகள் மீது, கல்வீச்சு நடத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர், பள்ளிக்கு தொடர்பில்லாத, வேறு நபராக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்தது. ஆனால், போலீஸ் தரப்பு, இதை மறுத்துள்ளது.  dinamalar,com
டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், வெளி நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. பள்ளி வளாகத்திற்குள் உள்ள சிறுமியை பற்றி, நன்கு தெரிந்த நபர் தான், இந்த கொடூர செயலை, அரங்கேற்றி இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 7 வயது தான் ஆகிறது. குறிப்பிட்ட சில விஷயங்களை தாண்டி, அந்த சிறுமியால், எதையும் பேச முடியவில்லை. ஆனாலும், இந்த வழக்கில், தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். எங்களுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில நாட்களில், குற்றவாளியை நெருங்கி விடுவோம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று முன்தினம் இரவு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். டாக்டர் புனிதா கூறுகையில், ""சிறுமி, பலாத்காரத்துக்கு ஆளானது, முதல் கட்ட பரிசோதனையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. முழு விவரமும் தெரிவதற்கு, இன்னும் சில நாட்களாகும். விரிவான மருத்துவ அறிக்கை தயாராகும் வரை, அதற்காக காத்திருக்க வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: