செவ்வாய், 20 மார்ச், 2012

போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் இன்று போராட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும்

கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, போராட்டக்காரர்களுக்கு ஊக்கமும் கொடுத்துவிட்டு இப்போது அவர்களை கைது செய்து வருவதற்குப் பெயர் தான் நாடகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைவி ஜெயலலிதா என்ன தான் முதலமைச்சர் பதவியிலே அமர்ந்திருந்தாலும், அவரது நினைவெல்லாம் நிறைந்திருப்பது திமுக மீது தான்.
அது சங்கரன்கோவில் இடைத் தேர்தலாக இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் திமுகவையும், என்னையும் கடுமையாகத் தாக்கி, அதை “ நாடகம்” என்று வர்ணிக்காமல் அவரால் இருக்க முடியாது.
அவருடைய அறிக்கைகளை அலட்சியப்படுத்தி விட்டு நாம் நமது பாதையில் செல்லலாம் என்று பார்த்தாலும், வலிய வந்து வம்பு வளர்ப்பதைப் போல நம் மீதே தொடர்ந்து பாய்ந்து சீண்டினால் நாம் என்ன தான் செய்வது?.

இலங்கை ராணுவத்தால் நமது இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது- இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக- மத்திய அரசு அதிலே தாமதமின்றித் தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட வேண்டுமென்று கேட்டு நான் விடியற்காலை 5.45 மணியளவில் - கட்சிக்காரர்களோ, உதவியாளர்களோ கூட உடன் வராத நிலையில்- தனியாக அண்ணா நினைவிடம் சென்று உண்ணாவிரதம் தொடங்கியதை பின்னர் அங்கே வந்த செய்தியாளர்கள் எல்லாம் அறிவார்கள்.

நான் அங்கே உண்ணாவிரதம் இருக்கும் செய்தி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் அதிகாரிகளும், கழகத் தோழர்களும் அங்கே வந்தார்கள். அதன் பின்னர் தான் நான் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி டெல்லி வரை சென்று, மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் தலையிட்டு என்னிடம் இலங்கையிலே உள்ள நிலை குறித்து விளக்கி என் உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின்பேரில், இன்னும் சொல்லப் போனால், அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 27-4-2009 அன்று நான் உண்ணாவிரதம் இருந்தபோது விடுத்த அறிக்கையில்,

“போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்கு கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள், இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசு அறிவித்துள்ளது. குடிமக்களை மீட்பதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும். போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்க் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனைகளே முதன்மையானவையாகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்று தெரிவித்ததையொட்டித் தான் அன்று பிற்பகலில் எனது உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றேன்.

இலங்கைத் தமிழர்களுக்காக அதைக் கூட செய்ய முன்வராத, “போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்” என்று அறிக்கை விட்டு விட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டு திசை திருப்பும் ஜெயலலிதா, நான் ஏதோ மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.

ஜெயலலிதா கூற்றுப்படியே நானாவது என்னுடைய இந்த வயதில் அந்த அளவிற்கு உண்ணாவிரதம் இருந்தேன்.

இப்போதும் அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க முன் வரவில்லை என்றால், தி.மு. கழகத்தினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றும், அதிலே நானும் பங்கேற்பேன் என்றும் அறிவித்தேன்.

மத்திய அமைச்சரவையிலிருந்தே தி.மு.கழக அமைச்சர்கள் விலகுவார்கள் என்றும் தீர்மானம் எழுதி உயர்நிலைச் செயல் திட்டக் குழுவிலே நிறைவேற்றுவதாக இருந்தேன். ஆனால் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன செய்தார்?.

தி.மு. கழகம் ஆட்சி பொறுப்பிலே இருந்த போது, பிரதமருக்கு நான் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரிலே சென்று பிரதமரிடம் எடுத்துக் கூற வேண்டாமா என்று எத்தனை அறிக்கைகளிலே ஜெயலலிதா என் மீது தாக்குதல் தொடுத்தார்? தற்போது முக்கியமான பிரச்னைகளிலே கூட முதலமைச்சர் என்ற முறையிலே ஏன் ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரிடம் முறையிடவில்லை?

அதற்கு மாறாக பிரதமரே கருணாநிதியின் நாடகத்திற்கு துணை போகின்ற அளவிற்கு நடந்து கொள்கிறார் என்று அறிக்கை விடுகிறார் என்றால் அது நாடாளுமன்ற நடவடிக்கைகளையே அவமதிக்கின்ற செயலாகும்.

இலங்கைத் தமிழர்களுக்காக 1956ம் ஆண்டிலிருந்து தி.மு. கழகம் எந்த அளவிற்குப் பாடுபட்டது என்பதைப் பற்றியெல்லாம் உயர்நிலை செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றவிருந்த தீர்மானத்திலேயே ஆண்டுவாரியாக, தேதி வாரியாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை இந்திய அரசு ஆதரிக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பாக; கழக உயர் நிலை செயல் திட்டக் குழு கூடும் என்பதும், மாநில அளவில் தி.மு. கழகம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் என்பதும், அதிலே நான் பங்கேற்பதும் செய்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது, பிரதமர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று கூறியதை வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நான் கை விட்டு விட்டேன் என்கிறார் ஜெயலலிதா.

பிரதமரின் பேச்சின் போது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட வரவேற்று மேசையைத் தட்டியதை தொலைக் காட்சியிலேயே காட்டினார்கள்.

பழ. நெடுமாறன் போன்றவர்கள் தமிழகம் முழுவதும் 23ம் தேதி நடத்தவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கூட திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மட்டும் பிரதமர் தெளிவற்ற பதிலைக் கூறியதாக அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் அறிக்கையிலேயே “தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளதாகவும் அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்” என்று பிரதமர் பேசியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தைகளை பிரதமரின் தெளிவற்ற பதில் என்று கூறி, அது வருத்தத்திற்குரியது என்று கூறியதோடு, தேவையில்லாமல் நான் ஏதோ துரோகம் இழைத்து விட்டதாகவும், நாடகத்தை அரங்கேற்றாமல் இருக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா சாடியிருப்பது எப்போதுமே அவருடைய சுபாவம் என்ற அளவில் நான் அதை அலட்சியப்படுத்த முனைந்தாலும் அவர் தமிழ் மக்களை ஏமாற்றி திசை திருப்ப முயற்சிப்பதை எடுத்துக்காட்டுவதற்காக இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

அதுபோலவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்படும் என்ற முடிவினையும் ஜெயலலிதா எடுத்துள்ளார்.

கூடங்குளம் கடந்த ஆறு மாதங்களாக மூடிக் கிடக்க யார் காரணம்? போராட்டக் குழுவினரை ஜெயலலிதா அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை ஏற்று 22-9-2011 அன்று நடைபெற்ற அமைச்சரவையிலே கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதால் தானே கடந்த ஆறு மாதமாக அந்த அணு மின் நிலையம் மூடப்பட்டு, தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு- இருள் சூழ்ந்ததோடு, கடந்த ஆறு மாத காலமாக அந்த கூடங்குளம் நிலையம் மூடப்பட்டு அலுவலர்களுக்கெல்லாம் பணியே இல்லாமல் ஊதியம் கொடுத்த அளவிலே மட்டும் 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படக் காரணம் யார்?.

அது மாத்திரமல்ல, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் கொடுத்த காரணத்தால், அப்பாவிப் பொதுமக்கள் ஏமாந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு, இன்று அந்தப் போராட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஏமாற்றி அவர்களையே கைது செய்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல அந்த அப்பாவி மக்களை மேலும் ஏமாற்றுவதற்காக ஏற்கனவே மத்திய அரசு பதினைந்து பேரைக் கொண்ட குழுவினை அமைத்த பிறகும், முன்னாள் குடியரசு தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம் போன்றவர்கள் உண்மையைத் தெளிவாக்கிய பிறகும், தமிழக அரசின் சார்பாக தேவையே இல்லாமல் மேலும் ஒரு குழுவினை அறிவித்து, அவர்களை அந்தப் பகுதிக்கெல்லாம் அனுப்பி, அவர்கள் அந்தப் பகுதி மக்களையே சந்திக்காமல், அறிக்கை கொடுத்து, அதை அப்படியே அலட்சியமாக கிடப்பிலே போட்டு விட்டு, தற்போது அந்தப் பகுதி வளர்ச்சிப் பணிக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்போவதாகத் திடீரென்று அறிவித்திருப்பதற்குப் பெயர் தான் “ நாடகம்”.

கடந்த கால வரலாற்றை மறந்து- நம்பி- ஏமாந்து போராட்டத்திலே ஈடுபட்ட கூடங்குளம் பகுதி மக்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: