புதன், 21 மார்ச், 2012

சுற்றிவளைப்பு: உதயக்குமார் சரணடைய மறுப்பு

திருநெல்வேலி:கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் வெளியேவராமல் அடம்பிடிக்கின்றனர். அதிவிரைவு அதிரடிப்படையினர் இடிந்தகரையை சுற்றி வளைத்துள்ளனர்.
கூடங்குளத்தில் இன்று இரண்டாவது நாளாக அணுமின்நிலையத்தில் பணிகள் நடந்தது. காலை 6.30 மணி, 7.30 மணி, 9 மணி என மூன்று தடவைகளாக அணுமின்நிலைய வாகனங்களில் ஊழியர்கள் வளாகத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு போலீஸ், அதிவிரைவு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ரஷ்ய விஞ்ஞானிகள் இரண்டு பஸ்களில் சென்றனர். பின்னர் அதிவிரைவுப்படையினர் எஸ்.பி.,விஜயேந்திர பிதரி தலைமையில் கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரை செல்லும் ரோடுகளில் அணிவகுப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக கூடங்குளம் வழியே போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.144 போலீஸ் தடையுத்தரவு இருப்பதால் வெளியாட்களின் நடமாட்டத்தையும் காணமுடியவில்லை.
போராட்டக்காரர்கள் கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் உள்ள தேவாலயம் முன்பாக உட்கார்ந்திருந்தனர். இடிந்தகரைக்கு செல்லும் பாதைகளை அவர்களே வெளியாட்கள் வரமுடியாமல் தடை ஏற்படுத்தியிருப்பதால் அங்கும் ஆள்அரவமற்று காணப்பட்டது.போராட்டம் துவங்கிய பிறகு கடந்த ஐந்து மாதங்களாக இதுவரையிலும் இடிந்தகரை அருகே போலீசார் சென்றதில்லை. பிற்பகலில் அதிரடிப்படையினர் இடிந்தகரைக்கு செல்லும் வைராவிகிணறு பாதை, தாமஸ் மண்டபம் பாதை ஆகியவற்றின் வழியாக வாகனங்களில் அணிவகுப்பாக சென்று வந்தனர். இடிந்தகரையில் இருந்து தொலைவில் அமைக்கப்பட்டிருந்த செக்போஸ்ட் போலீசாரையும் இடிந்தகரைக்கு அருகில் நிறுத்தினர். தொடர்ந்து இதே நிலை நீடிக்ககூடாது என்பதற்காக உதயகுமாரை சரணடைய செய்யும் முயற்சியாக எஸ்.பி.,விஜயேந்திர பிதரி, மொபைல் போனில் உதயக்குமாரிடம் பேசினார்.
""நீங்களாக வந்து சரணடைந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. போலீசார் அங்கு வந்தால் ஏற்படும் நிலையை யோசிக்கவேண்டும்,'' என கூறினார். அதற்கு உதயக்குமார் அந்த போன் தகவலை கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தார். ஆனால் போராட்ட மக்களோ அதற்கு சம்மதிக்கவில்லை. "பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்துவிட்டு உதயக்குமாரை கைது செய்ய கூறுங்கள்,' என்றார்கள்.இந்த தகவலை உதயக்குமார், எஸ்.பி.,யிடம் தெரிவித்தார். பின்னர் ""அதிகம் போலீசார் வராதீர்கள், தேவைப்படும் வாகனங்களில் வாருங்கள் நாங்களாக கைதாகிறோம்,'' என்றார். இருப்பினும் போலீசார் அங்கு செல்லவில்லை.

கஞ்சி காய்ச்சினர் : இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபடும் வாலிபர்களிடையே அடிக்கடி பீதி கிளப்பிவிடப்பட்டது. போலீசார் வருகிறார்கள் என்று தகவல் கிளப்பப்பட்டதால் அவர்கள் ஆத்திரமுற்றனர். மதியம் அங்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. ரோடு வழியாக வெளியூர் மக்கள் வரமுடியாத நிலையிருப்பதால், பக்கத்து கிராமத்தினர் படகுகளில் கடல்வழியாக இடிந்தகரைக்கு வந்துசெல்கின்றனர். இவர்கள் அணுஉலைக்கு பாதிப்பு எதையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம் கடற்கரைஓரமாக தாழப்பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டது.

அதிகாரிகள் ஆய்வு : தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். ராஜேஷ்தாசிடம் நிருபர்கள் கேட்டபோது, கூடங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் நூறு சதவீதம் போலீசின் கட்டுப்பாட்டில் உள்ளது. உதயக்குமாரை கைது செய்யும் முயற்சியில் உள்ளோம் என்றார்.மாலையில் தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு வந்து சுற்றிபார்த்தார். பின்னர் கூடங்குளம் அணுவிஜய் குடியிருப்பு பகுதிக்கும் சென்றார்.

பொறியில் சிக்கிய எலி உதயக்குமார்:இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டத்தில் உதயகுமார் நடுவில் அமர்ந்திருக்க பெண்களும், போராட்டக்காரர்களும் அமர்ந்துள்ளனர். உண்மையிலேயே கூடங்குளத்தை எதிர்ப்பவராக இருந்தால் அணுமின் நிலையத்தில் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டதை உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் வந்து தடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இடிந்த கரையில் ஒளிந்து சந்தர்ப்பவாத போராட்டம் நடத்தினார் என்பதை உறுதி செய்ததாக அணுஉலை ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.தற்போது இடிந்த கரையின் அனைத்து பாதைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. போலீஸ் அனுமதி இல்லாமல் எவரும் நுழைய முடியாத நிலையில் கூட்டம் சேராது என்பதை உணர்ந்த உதயகுமார் பொறியில் சிக்கிய எலியாக தவித்துக் கொண்டிருக்கிறார்.காலையில் இடிந்த கரையில் அவரது ஆதரவாளர்கள் அடிக்கடி எழுந்து ஓடிய போது, "இப்படியே, நீங்கள் செய்தால், நானே போலீசில் "சரண்டர்' ஆகிவிடுவேன் என்று மைக்கில் அறிவித்தார்

கருத்துகள் இல்லை: