வெள்ளி, 23 மார்ச், 2012

நித்யானந்தா ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக வழக்கு

நித்யானந்தா பெண் பக்தர்களிடம் மட்டும் தவறாக நடந்து கொள்ளவில்லை. இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டினார். பிதாதி ஆசிரமத்தைச் சேர்ந்த ஆண் பக்தர் ஒருவரை நித்யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினார்.
 நடிகை ரஞ்சிதாவும்,  நித்யானந்தாவும் படுக்கையறையில் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோ காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கருநாடக மாநிலம் பெங்களூரு அருகே பிதாதியில் இவரது ஆசிரமமும் உள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நிறைய கிளைகள் உள்ளன. இவருக்கு எதிராக பெண்கள் சிலர் பாலியல் புகார் அளித்ததால், பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சில மாத சிறைவாசத்துக்கு பிறகு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நித்யானந்தா வழக்கை கருநாடக சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், ராமனகரம் நீதிமன்றத்தில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இப்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், நித்யானந்தாவுக்கு எதிராக கூடுதல் புகார்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆண் பக்தர் ஒருவரை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினார் என்று கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.அய்.டி. காவல்துறையினர் நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நித்யானந்தா பெண் பக்தர்களிடம் மட்டும் தவறாக நடந்து கொள்ளவில்லை. இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டினார். பிதாதி ஆசிரமத்தைச் சேர்ந்த ஆண் பக்தர் ஒருவரை நித்யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தினார்.
வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும்போது, அந்தப் பக்தரை கூடவே நித்யானந்தா அழைத்துச் சென்றுள்ளார். அமெரிக்க நகரங்களில் தங்கி இருந்த போதும், அந்த ஆண் பக்தரிடம் ஓரினச்சேர்க்கைக்கு உடன்படுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
நித்யானந்தாவின் தொல்லை எல்லை மீறிப் போனவுடன், சி.அய்.டி. காவல்துறையில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார். புகாருக்கு சாட்சியாக சில ஆதாரங்களையும் அந்த பக்தர் அளித்தார். அவரது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
அந்த ஆண் பக்தர் தற்போது, அமெரிக்காவின் சீட்டில் நகரில் குடியேறிவிட்டார். மனரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சோதனை மேற்கொள்ள ஆஜராகுமாறு நித்யானந்தாவுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஒருமுறை கூட சி.அய்.டி. காவல்துறையினர் முன்பு ஆஜராகவில்லை.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நித்யானந்தா தவிர, அவரது செயலாளர் ஏ.சாதானந்தா, இவரது மனைவி ஜமுனா ராணி ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஆசிரமத்தில் நடைபெறும் பாலியல் நடவடிக்கைகளுக்கு உடன்படுவதாகவும், இந்த விஷயம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற ஒப்பந்தத்தில் நித்யானந்தா சார்பில் முதன்முதலில் கையெழுத்திட்டவர் ஜமுனாராணிதான். பின்னர் இவர் மூலமே, மேலும் சில பெண் பக்தர்கள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: