ஞாயிறு, 18 மார்ச், 2012

இடைத்தேர்தலுக்குப் பிறகு உருவாகிறது புதிய கூட்டணி?

சட்டசபை பொதுத் தேர்தலின்போது உருவான ஆளுங்கட்சி கூட்டணி, பத்து மாதம் கூட தாக்குப் பிடிக்காமல் உடைந்து போயுள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை எதிர்த்து, கூட்டணிக் கட்சியாக இருந்த தே.மு.தி.க., களமிறங்கியது; மற்றொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. பிரசாரத்தின்போது, ஆளுங்கட்சி மீதான கடுமையான விமர்சனத்தை வைத்து, விஜயகாந்தும் வெளுத்து வாங்கி ஓய்ந்துள்ளார்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியிலும் திருப்திகரமான அணுகுமுறை இல்லை. இடைத்தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரம் திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருந்ததில்லை .நெடுமாறன் சீமான் வகையறாக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில்லை என்ற திமுகவின் கொள்கை சீமான் போன்றவர்களை நடராஜன் போன்ற அதிமுக அடியாளாக மாற்றியுள்ளது
.ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்குக் கிடைத்த பின்னடைவு, அவர்களை மிரட்டி மீன் பிடிக்க, தி.மு.க.,வுக்கு வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் மறுபிறப்பு எடுத்துள்ள ம.தி.மு.க., அரசியல் களத்தில் அடுத்த, "ரவுண்டை' துவங்கத் தயாராகிவிட்டது. லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, அந்தக் கட்சியின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன.
கைகோக்குமா? அரசியல் கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாட்டால், ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள், தமிழக அரசியலில் அடுத்து வரும் காலங்களில் எதிரொலிக்கவுள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் விவாதங்களில், ஆளுங்கட்சியை முழுவீச்சில் எதிர்க்கத் தயாராகவுள்ள தே.மு.தி.க.,வோடு, தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு சேருமானால், அடுத்து நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடப்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் இருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை, தி.மு.க., கண்டித்ததும், மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் ஆலோசனை நடத்தியதும், இரு கட்சிகளும் பரஸ்பரம் பச்சைக் கொடி காட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணம்: ஆனால், இந்த உறவு நிரந்தமானதாக இருக்காது; தொடராது என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். அவர் கூறும்போது, "தே.மு. தி.க.,வை பெரிய கட்சியாக வளர வைக்க தி.மு.க., துணை புரியாது. அதனால், அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அ.தி.மு.க.,வுக்கு மாற்று தி.மு.க., என்ற பிம்பத்தை அவ்வளவு எளிதாக உடைத்துவிட முடியாது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதற்கு உதாரணம்' என்கிறார்.

லோக்சபா தேர்தல் கணக்கு: இடைத்தேர்தல் களத்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., - ம.தி.மு.க., குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. பிரசாரத்தில், தி.மு.க., வும் இதே பாணியைப் பின்பற்றியது. ஆளுங்கட்சி மீதான விமர்சனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த விஜயகாந்த், தி.மு.க., மீதான விமர்சனத்தைக் குறைத்துக் கொண்டார். இந்த யுத்திகளின் பின்னால், லோக்சபா தேர்தல் தொடர்பான அரசியல் கணக்குகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் எப்படி அணி அமைக்கப் போகின்றன என்பது தெளிவாகாத நிலையில், அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, யாருடைய, "கூட்டும், பொறியலும்' தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளது. லோக்சபா தேர்தலிலும், தனித்துப் போட்டியிட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும். அதன் மூலம், தேசிய அரசியலில், அடுத்து அமையவுள்ள மத்திய ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டுமாம். .

கருத்துகள் இல்லை: