புதன், 7 மார்ச், 2012

கொடூர ஆசிரியர்களின் பிரம்படி, மின்சார ஷாக் மட்டுமின்றி, பாலியல் தொல்லை

புதுடில்லி, மார்ச் 6- பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பதால், பிரம்படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரம்படி தண்டனை அளிக்கப்படுவது குறித்து நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தியது. 7 மாநிலங்களில் 6 ஆயிரத்து 632 மாணவர்களிடம் கருத்து கேட்டது. இதில், 9 மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள், தாங்கள் ஏதாவது ஒரு வகையில் தண்டனையை அனுபவித்துள்ளதாக தெரிவித்தனர்.
`நீ படிப்பதற்கு லாயக்கு இல்லை' என்று ஆசிரியரிடம் திட்டு வாங்கி இருப்பதாக 81.2 சதவிகித மாணவர்களும், பிரம்படி வாங்கி இருப்பதாக 75 சதவிகித மாணவர்களும், கன்னத்தில் அறை வாங்கி இருப்பதாக 69 சதவிகித மாணவர்களும் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு அதிகமாக தண்டனை கிடைக்காது என்ற கருத்தையும் இந்த கருத்துக் கணிப்பு பொய் ஆக்கி உள்ளது. 71 சதவிகித மாணவிகள், தாங்களும் பிரம்படி வாங்கி இருப்பதாகவும், கன்னத்திலும், முதுகிலும் அறை வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர். தலைமுடியை பிடித்து இழுக்கும் தண்டனை, பெரும்பாலும் மாணவிகளுக்குத்தான் அளிக்கப்பட்டு வருகிறது.

மின்சார ஷாக் கொடுக்கும் கொடூரத் தண்டனை கூட மாணவர்களுக்கு அளிக்கப்படுவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் மேற்கண்ட தண்டனைகள் அளிக்கப்படுவதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில், இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை அடிப்படையாக கொண்டு, பிரம்படி தண்டனைக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரம்படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளிகள் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளது.

இந்தக் குழு, பிரம்படி தண்டனை பற்றிய புகாரை விசாரிப்பது மட்டுமின்றி, பாலியல் தொல்லை, மனரீதியாக துன்புறுத்துதல் ஆகிய புகார்களை 48 மணி நேரத்துக்குள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ தண்டிக்கும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று ஆசிரியர்கள் எழுத்துமூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.

இத்தகைய தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளதா என்று ஆண்டுதோறும் பள்ளிகளில் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், அதன் முடிவுகளை புதிய கல்வி ஆண்டுக்கு முன்பு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.

பிரம்படி தண்டனை கொடுக்கக் கூடாது என்பதை பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது. பிரம்படி தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உரிமை, பள்ளி மாணவர்களுக்கு இருப்பதாக அவர்களுக்கு பிரச்சாரம் மூலம் உணர்த்த வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: