செவ்வாய், 6 மார்ச், 2012

மதியத்திற்குள் முடிவு தெரியும் உ.பி., உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்

புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற உ.பி., மணிப்பூர், பஞ்சாப், உத்தர்கண்ட், கேவா மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. யார் யார் பதவியை பறி கொடுக்கின்றனர், யார் ஆட்சியை பிடிக்கப்போகின்றனர் என்பது பற்றி இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். இந்த முடிவுகளை உடனுக்குடன் நாளை காலை 8 மணி முதல் இணையதளம் மூலம் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

உ.பி.,: ஐந்து மாநில தேர்தல்களில் உ.பி., சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தல் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மத்தியிலும் எதிரொலிக்கலாம் என அனைவரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடந்தது. பிப்ரவரி 8,11,15,19,23,28 மற்றும் மார்ச் 3ம் தேதியில் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் முதல்வராக இருக்கும் மாயாவதிக்கும், எதிர்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியின் முலாயம் சிங்க்கும் இடையே பெரும் போட்டி இருந்தது. முலாயமுடன் அவரது மகன் அகிலேஷ் யாதவும் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 402 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாததால், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியுடன் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தள கட்சி கூட்டு வைத்தது. இட ஒதுக்கீடு குறித்து பேசிய மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், பெனி பிரசாத் வர்மா ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு ஆளானார்கள். காங்., 357 தொகுதிகளிலும், ஆர்.எல்.டி., 46 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

396 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.,வும் இந்த முறை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுத்தியது. பா.ஜ.,சார்பில் ம.பி., முதல்வராக இருந்த உமா பாரதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், வரூண், ராஜ்நாத் சிங் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி பிரசாரத்தை புறக்கணித்தார். மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என தெரியவந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், பா.ஜ.,விற்கு மூன்றாவது இடமும், காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடமும் கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளுக்கு கடந்த ஜனவரி 30ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள சிரோன்மணி அகாலி தள கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலத்த போட்டி உள்ளது. சிரோன்மணி அகாலி தள கட்சியுடன் பா.ஜ., கூட்டணி வைத்தது.இந்த தேர்தலில் அகாலி தளம் 94 தொகுதிகளிலும் பா.ஜ., 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 117 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆளும் கட்சிக்கு ஆதரவாக முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும் அவரது மகனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பிரசாரம் செய்தார். இந்த மாநிலத்தில் ஆளும் கட்சியான சிரோன்மணி பா.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

உத்தர்கண்ட்: மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு ஜனவரி 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. முதல்வர் பதவியில் உள்ள கந்தூரி ஆட்சியை தக்க வைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பா.ஜ., மேலிட தலைவர்களும், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரசாரம் செய்தனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. பா.ஜ., 2 அல்லது 3 சீட்கள் குறைந்து பெறும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கோவா: கோவா சட்டசபைக்கு கடந்த மார்ச் 3ம் தேதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. ஆளும் கட்சியாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் திகாம்பர் காமத் உள்ளார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஒருநாள் பிரசாரம் செய்தனர். கோவாவில் பா.ஜ., கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே இழுப்பறி நிலவும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மணிப்பூர்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளில் கடந்த ஜனவரி 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மாநிலத்தில் கடந்த இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கும், மணிப்பூர் மக்கள் கட்சி, பா.ஜ., ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை: