ஞாயிறு, 4 மார்ச், 2012

உலகத்தரத்துடன் 8 புதிய டிரக்குகளை அறிமுகப்படுத்திய பாரத் பென்ஸ்

இந்தியாவின் கனரக வாகன மார்க்கெட்டில் 8 புதிய டிரக் மாடல்களை அறிமுகப்படுத்தி களமிறங்கியுள்ளது பாரத் பென்ஸ்.
ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் ஏஜி நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் பெயரில் கார்களை தயாரித்து வருகிறது. மேலும், அந்த நிறுவனம் டிரக் தயாரிப்பிலும் உலக அளவில் பெயர் பெற்றது.
இந்த நிலையில், இந்தியாவில் டிரக் மார்க்கெட்டில் டெய்ம்லர் அடியெடுத்து வைத்துள்ளது. பாரத் பென்ஸ் என்ற புதிய பிராண்டில் பல்வேறு ரக டிரக்குகளை அந்த நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.
மேலும், இந்திய தட்பவெப்ப சூழ்நிலை, சாலை நிலைகளுக்கு தக்கவாறு தனது டிரக் தயாரிப்பு தொழில்நுட்பத்தை பிரத்யேகமாக மாற்றியுள்ளது டெய்ம்லர். தவிர, சென்னை அருகிலுள்ள ஒரகடத்தில் டிரக் தயாரிப்புக்காக ரூ.4,400 கோடியில் உலகத்தரம் வாய்ந்த புதிய ஆலையையும் பாரத் பென்ஸ் கட்டியுள்ளது.
இந்த நிலையில், 9 டன் முதல் 49 டன் வரையிலான திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த 8 புதிய டிரக் மாடல்களை பாரத் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. மேலும், தனது டிரக்குகளுக்கு 80 முதல் 95 சதவீத உதிரிபாகங்களை இந்தியாவிலேயே பெறவும் பாரத் பென்ஸ் முடிவு செய்துள்ளது.
ஏசி வசதியுடன் கூடிய கேபின் உள்ளிட்ட 220 வேரியண்ட்களில் தனது டிரக்குகளை விற்பனை செய்ய உள்ளதாக பாரத் பென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனம், கட்டுறுதியான வடிவமைப்பு கொண்டதா தனது டிரக்குகள் இருக்கும் என்று பாரத் பென்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் டிரக்குகளை விற்பனைக்கு கொண்டு வர பாரத் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: