ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

குற்றவாளிகளின் மனித உரிமைகளை மட்டுமே காப்பாற்றுவர்.உங்களின் உரிமையை அல்ல

சென்னையில் அடுத்தடுத்து நடந்த வங்கிக் கொள்ளை, திருப்பூரில் நகைக் கடைக் கொள்ளை என்பவை, வெறும், "திருட்டு' என்ற வகையைச் சேர்ந்தவை அல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்டவை. அரசு, மெத்தனமாக இருந்தால், அது நிர்வாகக் குறைபாடு, ஆள்பவர்களின் பொறுப்பின்மை என்று குறை கூறப்படுகிறது. இந்தக் குறைகூறல் நியாயம் தான். ஆனால், உடனடி, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், மனித உரிமைகள் பறிபோகின்றன என்ற கோணத்தில், அதுவும் குறைகூறப்படுகிறதே.

கொள்ளையை விட அதிகமாக வருத்தம் தருவது, இந்தக் கூப்பாடு தான். ஒவ்வொரு, "என்கவுன்டர்' போதும், இறந்தவர்களின் உறவினர்களை விடவும், சோகமாக ஒப்பாரி வைப்பவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் தான். இதுபோன்ற சம்பவங்களில், விரைவில் துப்பு துலக்கிய காவல்துறைக்கு சம்பிரதாயமான பாராட்டுக் கூடக் கிடைப்பதில்லை; கண்டனக் குரல்கள் உடனே எழுகின்றன.
"சுட்டுக் கொன்றிருக்கக் கூடாது' - இது முதல் அபிப்பிராயம். அடுத்தது, ஜன்னல் வழியாகச் சுட்டிருக்கக் கூடாது. மூன்றாவது கருத்து, இரவில் போலீசார் பிடித்திருக்கக் கூடாது. இரவில் கள்வர்கள் வெளியே வந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், காவலர்கள் எதுவும் செய்யக் கூடாது என்பது, மனித உரிமை அமைப்புகளின் கொள்கை என்றால், "மனித உரிமை' என்பதற்கு எப்படிப் பொருள் கொள்வது? வங்கிக் கொள்ளையர்களை போலீசார், "என்கவுன்ட்டர்' செய்தது தவறு என்பதை ஒப்புக் கொண்டால், சரியான வழிமுறை எப்படி இருக்க வேண்டும்? பல யோசனைகள் இருக்கக்கூடும்.

இதோ சில... முதலில், கள்வர்கள் உயிருக்கு ஆபத்து வரக்கூடிய அளவுக்குக் காவல்துறை எதுவும் செய்யக் கூடாது. அரசியல் கொலைகள் துப்பு துலக்கப் படுவதில்லை; தடயங்கள் மறைக்கப்படுகின்றன. அதுபோலவே, வங்கிக் கொள்ளைகளிலும் செய்தால், நிச்சயமாக மனித உரிமையைக் காப்பாற்ற முடியும். வங்கிகளில் கொள்ளை போனது யாருடைய பணம், வாடிக்கையாளர்களின் பணம் என்றால், அவர்கள் அதை எப்படி சேர்த்தனர், எப்படி வங்கியில் செலுத்தினர் என்பதைக் கண்டுபிடிக்க, முதலில் ஒரு கமிஷன் அமைக்கலாம். கமிஷன் தன் அறிக்கையை அளிக்க எடுத்துக் கொள்ளும் கால அவகாசம், கள்வர்கள் தாம் கொள்ளையடித்த பணத்தைச் செலவிடவும், சேமிக்கவும், முடிந்தால், அதே வங்கியில் தம் கணக்கில் அல்லது பினாமி கணக்கில் செலுத்தவும் வசதியாக இருக்கும். அது, மனித உரிமை என்பதை காவல்துறையும், அரசும் புரிந்து கொள்ள வேண்டும். கொள்ளை போனால் தடயங்களைத் தேடுவது, துப்பு துலக்குவது போன்ற வேலையைக் காவல்துறை செய்யக் கூடாது. என்ன செய்வது என்பதை, மனித உரிமை ஆர்வலர்களிடம் கேட்க வேண்டும். இந்த மனித உரிமை ஆர்வலர்கள், சில நிபந்தனைகளை விதிப்பர்.

முக்கியமய்யா முக்கியம்... மனித உரிமை முக்கியம். எந்தக் குற்றவாளியையும் காப்பாற்றும் மனித உரிமை, மிகவும் முக்கியம். எனவே, பூட்டிய வீட்டில் கள்வர்கள் பதுங்கியிருந்தால், அங்கே இரவில் போலீஸ் போகக் கூடாது. பகலில் சென்றால் பரவாயில்லை. குற்றவாளிகள் தப்பிக்க இருட்டு உதவுகிறது. அதைக் காவலர்கள் தடுப்பது நியாயமா? பகலில் போகட்டுமே போலீஸ். அப்போது கள்வர்களும் இல்லை, கொள்ளையடித்த பணமும் இல்லை, ஆவணங்களும் இல்லை. ஆனால், சில கோவணங்கள் மட்டும் கிடைத்தன என்றால், அவற்றைக் கைப்பற்றிய பிறகு என்ன செய்யலாம் என்பதையும், மனித உரிமை ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஒருநாள் அவகாசம் கொடுத்தும், கொள்ளையர்கள் தப்பிக்கவில்லை, பகல் போய், இரவு வந்த பிறகும் அங்கேயே இருக்கின்றனர் என்பது தெரிய வந்தால், அவர்களிடம் போலீஸ்காரர்கள் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டாமல், கதவைத் திறக்கச் சொல்லிக் கெஞ்சிக் கேட்டு, சமாதானப் பேச்சு நடத்தலாம். அவர்கள் கதவைத் திறக்கவில்லை என்றால், மிகவும் பொறுமையாகக் காத்திருக்கலாம். ஒருவேளை கொள்ளையர்கள் பின்வாசல் வழியாக வெளியேறி விட்டால், மனித உரிமை காப்பாற்றப்பட்டு விட்டது என்ற திருப்தியுடன் காவலர்கள், தங்கள் அலுவலகத்திற்கு திரும்பலாம். கள்வர்கள் வெளியேறவில்லை, கதவைத் திறக்கவில்லை, ஜன்னலை மட்டும் திறக்கின்றனர்; துப்பாக்கியை நீட்டுகின்றனர் என்றால், காவல்துறையினர் தேசப்பிதா சிபாரிசு செய்துள்ள, "அகிம்சை' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

"நண்பர்களே, சகோதரர்களே, துப்பாக்கி எதற்கு! நாங்களோ உங்களைச் சுடப் போவதில்லை. சமாதானத் தூதுவர்கள் நாங்கள். எனவே, தாங்கள் தங்கள் தேவைக்கென்று எடுத்துக் கொண்ட, 14 லட்ச ரூபாய் கொஞ்சம் பெரிய தொகையாகத் தெரிகிறது. நீங்கள் கொடுக்கும் வீட்டு வாடகை, 5,000 தான். இதுவரை இந்தக் கொள்ளையைச் செய்யத் திட்டமிட்ட தொகையை, அந்த, 14 லட்சத்திலிருந்து கழித்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு லாபம் இருக்காது. எனவே, அடுத்த திருட்டைச் செய்யும் வரை, செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். மீதி 10 லட்ச ரூபாயைக் கொடுத்து விடுங்கள்...' என்று, மன்றாடிக் கேட்டு, அதை வங்கியில் சேர்ப்பிக்கலாம். மோசடிச் சீட்டுக் கம்பெனிகளிடமிருந்து மீட்ட ரூபாயைப் பங்கிடுவது போல், வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு, 14 ரூபாய்க்கு, 10 ரூபாய் என்று கொடுத்து விடுவது நியாயம். அதில் மனித உரிமை இருக்கிறது. அதைச் செய்யாமல், துப்பாக்கியை நீட்டுவதா மனித உரிமை? காவல் துறையினருக்கு எதுவுமே புரிவதில்லை. துப்பாக்கியையும், புத்தியையும் சேர்த்தே தூக்கி எறிந்தால் தான், அவர்கள் மனித உரிமைøயும், நாட்டையும் காப்பாற்ற முடியும்.

பணத்தால் தான் சமுதாயம் கெட்டுப் போகிறது. அதனால் தான், பணத்தை மக்களிடமிருந்து பறித்து, பிரித்து, மக்கள் ஆன்மிகமாக முன்னேறுவதற்கு கள்வர்கள் உதவி செய்கின்றனர் என்ற வாழ்வியல் பேருண்மையை மனதில் கொண்டு, அவர்களுக்கு காந்தி மண்டபம் போன்ற புனிதமான இடத்தில் பாராட்டுவிழா நடத்தலாம். துறவிகளின் மடங்களிலிருந்தும், ஆலயங்களிலிருந்தும் பிரசாதங்களை கொண்டு வந்து கொடுக்கலாம். மனித உரிமை ஆர்வலர்களை அழைத்து, கொள்ளையர்களைப் புகழ்ந்து பேச ஏற்பாடு செய்யலாம். நம் காவல்துறை தெரிந்து கொள்ள கூடாதது எது என்பது பற்றி, நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம் இது... பல ஆண்டுகளுக்கு முன், அவர் ஜப்பானுக்கு சென்றிருந்தார். "நாயர் சான்' என்பவரின் ஓட்டலில் ஒரு வாடிக்கையாளர், தன் கைப்பையை மறந்து விட்டு வெளியே சென்று காரில் ஏறிவிட்டார். இன்னொருவர் அதை எடுத்தார். ஓட்டல்காரர் எடுத்தவரைச் சுட்டுவிட்டார். விசாரணை நடந்தது. "வைத்து விட்டு போனவர் ஒருவர்; எடுத்தவர் மற்றவர்; அவர் திருடுகிறார் என்பது தெரிந்ததால் உடனே சுட்டேன்' என்றார் ஓட்டல்காரர். திருட்டைத் தடுத்ததால், அவருக்கு தண்டனை இல்லை. ஆனால், அது அல்ல நம் நோக்கில் மனித உரிமை. அதெல்லாம் ஜப்பான், அரபு நாடுகள், சிங்கப்பூர் போன்ற வளராத, பரம ஏழைகளான பின்தங்கிய நாடுகளின் நடைமுறை. அவை, மனிதர்கள் வாழும் நாடுகள் அல்ல.

கொள்ளையடித்தால் என்ன, அவன் மனிதன். அவனுக்குக் கொள்ளையடிக்க உரிமை உண்டு. காவலர்களுக்குத் தான் அவர்களை தங்கள் உசிதம் போல் கையாளும் உரிமை இல்லை. எவ்வளவு முன்னேறியிருக்கிறது நம் இந்தியா! ஏதாவது என்கவுன்டர்களை நடத்தினால், நாம் இனிமேல் சிங்கப்பூர், ஜப்பான் போல பின்தங்கிய நாடாக மாறிவிடுவோம். எனவே, அந்த நாடுகளின் சட்டங்கள், நடைமுறைகள் என்ன என்று தெரிந்து கொண்டு விடாதீர்கள், மக்களே! அதை நம் மனித உரிமை ஆர்வலர்களிடம் சொல்லி விடாதீர்கள். அப்புறம் உங்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். நாங்களும் மனிதர்கள்தானே என்று அசட்டுத்தனமாகக் கேட்டு விடாதீர்கள்... மனித உரிமை ஆர்வலர்கள், குற்றவாளிகளின் மனித உரிமைகளை மட்டுமே காப்பாற்றுவர்; உங்களின் உரிமையை அல்ல. இ-மெயில்: hindunatarajan@hotmail.com

ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

கருத்துகள் இல்லை: