திங்கள், 27 பிப்ரவரி, 2012

அமெரிக்க படைகள் குவிப்பு-ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால் தாக்க திட்டம்

டெக்ரான்: ஈரானுடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா தனது படைகளை வெகுவேகமாக குவித்து வருகிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டமானது ஆக்கப்பூர்வமானதற்கு அல்ல.. அணு ஆயுத தயாரிப்புக்குத்தான் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன.
ஈரான் அணுசக்தித் திட்டங்களைப் பார்வையிட்ட சர்வதேச அணுசக்தி கழகத்தினரும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்க முனைப்புக் காட்டி வந்த இஸ்ரேல், தற்போது வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இஸ்ரேலைவிட ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுப்பதே வெற்றிக்கு சாத்தியமாகும் என நேச நாடுகள் கருதும் நிலையில் பாரசீக வளைகுடா மற்றும் ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பெர்ஷிய வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் போர்க் கப்பல்களில் உள்ள ஆயுதங்கள், நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. கரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், பூமிக்கு அடியில் உள்ள சுரங்கங்களைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பக்ரைன் நாட்டு ராணுவத்தினருக்கு அமெரிக்கா போர்ப் பயிற்சிகளை அளித்துவருகிறது.
இந்நிலையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து அரபிக் கடல் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதும் ஈரான் மீது வெகுவிரைவில் அமெரிக்கா போர் தொடுக்கக் கூடும் என்பதையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்

கருத்துகள் இல்லை: