மறைந்த பிரபல கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி பட்டோடிக்கும் இந்தி நடிகை ஷர்மீளா தாகூருக்கும் மகனான இந்தி நடிகர் சையப் அலி கான் இந்தி நடிகை கரீனா கபூரை திருமணம் செய்திருக்கிறார். தனது வாழ்க்கையில் மதங்கள் வகிக்கும் பங்கு பற்றியும், இந்தியாவில் மதம் அரசியல் ஆக்கப்படுவதை விமர்சித்தும் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்  எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
சையபின் தந்தை பட்டோடி
நான் ஓர் விளையாட்டு வீரரின் மகன். இங்கிலாந்து, போபால், பட்டோடி, டில்லி மற்றும் மும்பையில் வளர்ந்தேன். எனக்கு தெரிந்த எந்த ஒரு இந்து அல்லது முஸ்லிமை விடவும் சற்று அதிகப்படியான இந்தியன் என்று தான் என்னை நான் சொல்வேன். ஏனெனில், நான் இந்துவும், முஸ்லிமும் ஆனவன். மக்களுக்கு எதையும் அறிவிக்கின்ற அல்லது இந்தியா மற்றும் அதன் கிராமங்களில் இருக்கின்ற வகுப்புவாதத்தின் தீமைகள் குறித்து சொல்கின்ற நோக்கத்தில் இந்த கட்டுரையை எழுதவில்லை. ஆனால், எனது நண்பர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்ற வகையில் இதைப் பற்றி பேசுகிறேன்.