‌டந்த சனிக்கிழமை அதிகாலையில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மேடக் நகரத்தின் இந்திரா நகரில் உள்ள மூத்த சிவில் நீதிபதி சந்திரசேகர பிரசாத் தனது வீட்டுக் குளியலறையில் ஏதோ சத்தம் கேட்கவே  என்னவென்று அறிய எட்டிப் பார்க்கிறார். ஒரு 12 வயதுச் சிறுவன் கால்களில் இரும்புச் சங்கிலியால் விலங்கிடப்பட்டு கீழே விழுந்து கிடக்கிறான். அதிர்ச்சியடைந்த நீதிபதி அவனை எழுப்பி யார் என்ன என்று விசாரிக்கிறார்.
அவ‌னது பெயர் மகபூப் என்றும், நீதிபதியின் வீட்டு மதிலை ஒட்டி அமைந்துள்ள காஸி உலூம் மதரசா பள்ளியில் அரபி படிக்க அவனது பெற்றோர்கள் அவனை அனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிய வருகிறது. அரபி படிக்க பிடிக்காமல் வீட்டுக்கு தப்பி ஓட இருமுறை முயன்றானாம். அப்படி தப்பி விடாமல் இருக்க அவனை இரும்புச் சங்கிலியால் கடந்த 15 நாட்களாக பூட்டி வைத்துள்ளனர் மதரசா நிர்வாகத்தினர். அங்கிருந்து தப்பி நீதிபதியின் குளியலறைக்குள் வந்து கிடந்தவன் தனது ஆசிரியரான கலீல் அகமது, தலைமையாசிரியர் மவுலானா பர்கத் ஆகியோர் தான் இவ்வாறு செய்தனர் என நீதிபதியிடம்  கூறியுள்ளான்.