வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய நூல்

May be an image of ‎text that says '‎இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு CO9 திரு ரு.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் (இலங்கை முன்னாள் எதிர்கட்சி தலைவர்) TEA a ل‎'‎

ராதா மனோகர் :  இலங்கை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழர் விடுதலை கூட்டணியில் தலைவருமான அமரர் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் குடும்ப  இல்லத்தை ஒரு வரலாற்று நினைவகமாக
12  02- 2025  அன்று அமைத்துள்ளார்கள் என்று தெரிகிறது.
இலங்கை தமிழரின் வரலாற்றில் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பெயரை எந்த காலத்திலும் எவராலும் அழித்து விட முடியாது.
அவரின் உயிரை பறித்தவர்கள் எவ்வளவு பெரிய மூடர்கள் என்பதை காலம் மிக தெளிவாக காட்டி விட்டது.
கொழும்பில் சுயமரியாதை இயக்கத்திலும்  திராவிட கழகத்திலும் தனது அரசியலை ஆரம்பித்து பின்பு தமிழரசு கட்சியால் உள்வாங்கப்பட்டார்
திராவிட இயக்கத்தில் திரு எஸ் டி சிவநாயகம் செல்லையா இராசதுரை போன்ற திராவிட கோட்பாட்டு இளைஞர்களோடு தனது அரசியல் பயணத்தை  தொடங்கியதாலோ என்னவோ திராவிட  பேச்சாளர்களுக்கே உரிய நல்ல தமிழ் பேச்சு  இவருக்கு வாய்த்திருந்தது1
இவருக்கு பின்வந்த எந்த தமிழ் அரசியல்வாதிக்கும் இந்த நல்ல தமிழ் பேச்சு அமைந்திருக்கவில்லை!


இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் இலங்கையில் தடை செய்யப்பட்ட போது நாடாளுமன்றத்தில் இவர் ஆற்றிய உரை திராவிட சித்தாந்தவாதிகளால் ஒரு போதும் மறக்கப்பட கூடாத ஒரு வரலாற்று ஆவணமாகும்.
சில வருடங்களுக்கு முன்பு இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றியும் அந்த ஒப்பந்தம் உருவான சூழ்நிலை போன்ற விபரங்களை தேடிய பொழுது அந்த விபரங்கள் பொதுவெளியில் போதிய அளவில் காணப்படவில்லை.
புலிகள் மூர்க்கமாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து திரு  அமிர்தலிங்கம்  போன்றோரை கொலை செய்திருந்த காரணத்தால் இந்த ஒப்பந்தத்தை பற்றி பேசுவதே ஒரு ஆபத்தான விடயமாக கருதப்பட்டது.
புலிகளின் அழிவுக்கு பின்பு கூட பொதுவெளியில் போதிய விபரங்கள் முன் வைக்க படவில்லை.

 திரு அமிர்தலிங்கம் அவர்கள் இந்த ஒப்பந்தம் உருவான விபரங்களை செல்வா ஈட்டிய செல்வம் என்ற பெயரில் ஒரு  நூலை எழுதியிருந்தார்.

புலிகளின் இருட்டடிப்பின் காரணமாக இந்த நூல் பொதுவெளியில் இருக்கவில்லை.
எப்படியாவது இந்த நூலை பொதுவெளிக்கு கொண்டுவரவேண்டும் என்ற முனைப்பில் திரு அமிர்தலிங்கத்தின் மகன் திரு பகீரதன்  அவர்களை தொடர்பு கொண்டு இந்நூலை பற்றி கேட்டேன்.
அவரிடமும் இந்நூல் இருக்கவில்லை . யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதி இருக்க கூடும் என்றும் இருந்தால் அதை எப்படியாவது  எனக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்
அது கொரோனா காலம் ! தபால் போக்குவரத்துகள் ஒழுங்காக இயங்காத காலம்.
எனவே யாழ்ப்பாணத்தில் அந்நூல் இருந்தாலும் எனக்கு அதை அனுப்பி வைப்பது இலகுவல்ல என்று எண்ணினேன்.
அப்பொழுது திரு ஆனந்த சங்கரி அவர்களின் மகன் முறையான திரு ரூபசங்கரி அவர்களை தொடர்பு கொண்டேன்.
அவரின் முயற்சியால் ஒரு பழைய போட்டோ பிரதி பி டி எப்  வடிவத்தில் கிடைத்தது
அதை ஓரளவு டைப் செய்தென்
ஒரு பழைய போட்டோ பிரதி என்பதால் பல எழுத்துக்கள் சொற்கள் தெளிவற்று இருந்தன.
மீதியை திரு ரூபசங்கரி அவர்களே  டைப் செய்து ஈமெயில் அனுப்பினார்
அவற்றை கொஞ்சம் ஒழுங்கு படுத்தி பிழைகளை திருத்தி எனது இணையத்திலும் முகநூலிலும் பதிவிட்டேன்.
பின்பு அதை நூலுருவில் கொண்டுவரும் முகமாக திரு பகீரதன் அவர்களிடம் கேட்டேன்.
அவர் அதை திரு நெடுமாறன் அவர்கள் மேலதிகமாக கட்டுரை ஒன்றும் எழுதி நூலுருவில் வெளியிட்டு உள்ளார் எனவே அதை பற்றி கவலை பட வேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்
யாரவது ஒருவர் அதை பொதுவெளிக்கு கொண்டு வந்தால் சரி என்ற எண்ணத்தில் அமைதியானேன். .
பின்பு ஒரு சில வருடங்களுக்கு பின்பு ஒரு சந்தேகம் எழுந்தது.
உண்மையில் திரு நெடுமாறன் திரு அமிர்த்தலிங்கம் அவர்களின் நூலை அச்சடித்துள்ளாரா அல்லது புலிகளின் விசுவாசம் காரணமாக மீண்டும் புதைத்து விட்டாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
இம்முறை நான் தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பாளரான திரு கௌரா ராஜசேகரன் அவர்களின் கவனத்திற்கு இந்நூலை கொண்டுவந்தேன்.
இது ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம்.
எனவே விற்பதற்காகமட்டும் அல்லது மக்களின் மனங்களில் விதைப்பதற்காகவும் நூல்களை வெளியிடும் கௌரா பதிப்பகம்  - சீதை பதிப்பகங்கள் வாயிலாக இந்நூல்  இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.   

மீள் பதிவு : இலங்கை திராவிட முன்னேற்ற கழக தடைக்கு எதிராக திரு அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
 ராதா மனோகர் : . 22.07.1962  இல் ஆட்சியில் இருந்த ஸ்ரீ மாவோ தலைமையிலான அரசு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை தடை செய்வதாக அறிவித்தது .
இந்த தடைக்கு எதிராக   நாடாளுமன்றத்தில் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். வவுனியா எம்பி சிவசிதம்பரம் உட்பட பலர் இதை கண்டித்து உரையாற்றினார்க்ள
திரு அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்  
...
"இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி,
அவர்களுடைய மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த
நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு
முரணானது!
மனித உரிமைக்கு மாறானது என்பதை கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.


இந்த கௌரவம் மிக்க சபையிலே சிம்மாசனப் பிரசங்க விவாதத்தில் பேசிய பல்வேறு அங்கத்தவர்களும் இந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்தினைப் பற்றி குறிப்பிட்டார்கள்.
கௌரவ காலிப் பிரதிநிதி டபிள்யூ தஹா நாயக அவர்களும் திராவிடர்
முன்னேற்றக் கழகத்தினைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

எனக்கு முன் பேசிய மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி ஏ.எப்.எம். மரைக்காயர் அவர்களும், நுவரெலியா பிரதிநிதி வில்லியம் பெர்னாண்டோ அவர்களும் குறிப்பிட்டார்கள்.

வெலிமடைப் பிரதிநிதி கே.எம்.பி. இராஜரத்தினாவும், அவரது பாரியார் குசுமா இராஜரத்தினாவும் இ.தி.மு.க-வுக்கு எதிராக கர்ஜனை செய்தார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கம்புறுபிட்டி பிரதிநிதி பேர்ஸி விக்கிரம சிங்க அவர்களும் பிரஸ்தாபித்தார்கள்.
இவர்கள் எல்லோரும் குறிப்பிடும் இந்தப் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டியதாகிறது.
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று தோன்றிய ஓர் இயக்கமல்ல.

நான் இலங்கையில் சர்வகலாசாலையில் 1946 - 47-ம் ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இ.தி.மு.கழகம் இருந்தது.
கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கழகம் இந்த நாட்டில் இயங்கி வருகின்றது.
அவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் முக்கியமாக சாதியின்
பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதேயாகும்.

மூட நம்பிக்கையில் சிக்கி, காடனையும் மாடனையும் வணங்கி, பலியிட்டுக் கூத்தாடி வாழும் மூட நம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதாகும்.
மலைநாட்டு மக்கள் தன்மானம் பெற்றவர்களாக,
பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இ.தி.மு.க. இயங்கி வருகிறது.

பெயரளவில்தான் தென்னிந்தியாவில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இ.தி.மு.க-வுக்கும் ஒற்றுமை இருக்கிறதே தவிர,
 ஸ்தாபனரீதியாக தொடர்பு எதுவும் இல்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூற வேண்டியது என்
கடமையாகும்.

இந்திய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அண்ணாதுரை
அவர்களும், செயலாளர் நெடுஞ்செழியன் அவர்களும், இலங்கை
திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்கும் தங்களுக்கும், எதுவிதமான
தொடர்பும் கிடையாது என்பதை எல்லோருக்கும் கூறியிருக்கிறார்கள்.

இ.தி.மு.க. என்ற பெயரில் மூன்று இயக்கங்கள்  இருந்தாலும்,
இரண்டு இயக்கங்கள்  கொழும்பில்தான் இருந்துவருகின்றன.
தோட்டப்பகுதியில் இருக்கும் மற்றொரு இயக்கம்  திரு  இளஞ்செழியன் என்பவரைச்
செயலாளராகக் கொண்டது.

அவர்களுடைய நோக்கம் நாட்டை பிரிப்பதல்ல.
இ.தி.மு.க-வின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதுதான் என்று யாராவது நிரூபிப்பார்களேயானால், நான் என்னுடைய பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய ஆயத்த இருக்கிறேன்!

கருத்துகள் இல்லை: