சனி, 4 மே, 2024

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6115 புத்தொழில் நிறுவனங்கள் திமுக ஆட்சி 3 ஆண்டு சாதனை

 கலைஞர் செய்திகள் Lenin : திராவிட மாடல் அரசில் கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவாக புத்தொழில் நிறுவனங்கள் (Startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பெருமகிழ்ச்சிக்குரியது.
அந்த வெற்றியைத் தக்க வைக்கும் நோக்கோடு உலகில் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்து கொள்ளும் வகையில் உலகப் புத்தொழில் மாநாடு (Global Startup Summit) வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.



இந்த அறிவிப்பின் மூலம் புத்தொழில் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசு செலுத்தி வரும் ஆர்வமும் அக்கறையும் எளிதில் விளங்கும்.

அதாவது, 2021-இல் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நிலையில் தமிழ்நாட்டிலிருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2105 மட்டுமே. மூன்றாண்டுகளாக இந்த அரசு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்து வரும் மிகப்பெரிய ஊக்கம் காரணமாகவே 2021-க்குப் பிறகு 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்னும் குறிக்கோளின் அடிப்படையிலும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வரும் தொழில் வளர்ச்சியின் சாதனைக் குறியீடாகவே திகழ்கிறது.

முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023 ஆகஸ்டு திங்களில் நடத்திய தமிழ்நாடு புத்தொழில் திருவிழா 2023 மாபெரும் வெற்றி கண்டது.

இதில், 21,556 பேர் பங்கேற்றனர். 18,835 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 1,761 பிரதிநிதிகளும், 841 கண்காட்சி அமைப்பாளர்களும் இத்திருவிழா நிகழ்ச்சிகளில் இடம் பெற்றனர். 83 உற்பத்திப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 67 புத்தொழில் நிறுவனங்கள் மூலம் 6,251 பொருள்கள் தயாரிக்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அவைகளில், 3 கோடியே 64 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,674 தொழில்களைத் தொடங்கிட தொழில் முகவர்கள் முன்வந்தனர்.

மகளிர் புத்தாக்கத் தொழில் முயற்சிகள் 18 மகளிர் சுய உதவிக் குழுக்கள் புத்தாக்கத் தொழில் கூடங்களாக மாறியுள்ளன. 25 மகளிர் தொழில் முகவர்கள் புத்தாக்கத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்புகள்

தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் துறை நிதியுதவியால் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்கள் மூலம் 150 வேலைவாய்ப்புகளும், டான்சீட் நிதியுதவியில் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்கள் மூலம் 1,525 வேலைவாய்ப்புகளும் வேறுபல புத்தாக்கத் தொழில்கள் மூலம் 238 வேலைவாய்ப்புகளும் என மொத்தம் 1,913 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதலீடுகள் உயர்வு

டான்சீட் நிதியுதவியில் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்களில் 314.30 கோடி ரூபாய் முதலீடுகள் உயர்ந்துள்ளன.

தமிழ்நாடு நிதித் தளம் (TANFUND PLATFORM) வாயிலாக 714 முதலீட்டாளர்களுடன் இணைந்துள்ள புத்தாக்கத் தொழில்களின் நிதி 26 கோடியே 40 இலட்சம் என உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் அவர்களின் முயற்சியால் புத்தாக்கத் தொழில்களுக்கு நிதியுதவி அளித்திட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி எச்.டி.எப்.சி வங்கி, டி.பி.எஸ் வங்கி, பெடரல் வங்கி, எஸ்.வங்கி, யுகோ வங்கி ஆகிய வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

பயிற்சிகள்

புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் அளித்திட 5,393 பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிப்காட் தொழிற் பூங்காக்களில் புத்தாக்க மையங்கள் திருப்பெரும்புதூர், ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் புத்தாக்க மையங்கள் 33.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் நிறுவப்பட்டு, புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கு இந்த அரசு பெரிதும் ஊக்கம் அளித்து வளரும் நிலையிலுள்ள புத்தாக்கத் தொழில்களின் மேம்பாட்டிற்கு உதவும் ஊக்க மையங்கள் (INCUBATION CENTRE)

புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கான 5 ஊக்க மையங்களுக்கு சிங்கப்பூரிலுள்ள ஸ்விட்ச் (SWITCH) தொழில் நிறுவனத்திற்குச் சென்று அதன் செயல்பாடுகளைஅறிந்து பயன்பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

15 புத்தாக்கத் தொழில் ஊக்க மையங்களின் வளர்ச்சிக்காக அவை ஒவ்வொன்றுக்கும் 5 இலட்சம் ரூபாய் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் ஊக்க வளர்ச்சி மையங்களின் முதிர்வு மாதிரி தயாரிப்பதில் 55 ஊக்க மையங்கள் (incubetter) பயன்பட்டன.

புத்தாக்கத் தொழில்களுக்கான போர்ட்டல் 29.2.2024 அன்று ஏற்படுத்தப்பட்டது. அது முதல், 78 புத்தாக்கத் தொழில்கள் இதில் இணைந்துள்ளன.

இப்படிப் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் மாபெரும் சாதனைகள் படைத்து வருகிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை: