வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

நாங்குனேரியில் சகமானவரை 6 மாணவர்கள் சேர்ந்து அரிவாள் வெட்டு .. வன்கொடுமை பகுதியாக அறிவிக்கவேண்டும் - திருமாவளவன்

minnambalam.com  - christopher  :; ”சக மாணவரை 6 மாணவர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தை அடுத்து அப்பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில், சக மாணவர் மற்றும் அவரது தங்கையை ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.

சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகும். சாதிப்பெருமை, மதப்பெருமை என்னும் பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியலே காரணம்.

சாதியவாதம், மதவாதம், இனவாதம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாயிருக்கும் சங்பரிவார்கள் இத்தகைய சமூக முரண்களைக் கூர்மைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் கைகளில் சாதி அடையாள கயிறுகளைக் கட்டுவது, சைக்கிள்கள்- இருசக்கர வண்டிகளில் சாதி அடையாள முத்திரைகளை வரைவது அல்லது ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளை சாதிய- மதவெறி அமைப்புகள் மாணவர்களிடையே திணிப்பதும் நடக்கிறது. அரசு இவற்றையெல்லாம் கண்காணித்து மாணவச் சமூகத்தைப் பாதுகாத்திட வேண்டும்.

சின்னதுரை குடும்பத்திற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். வேறு பள்ளியில் சின்னதுரை கல்வித் தொடர அரசு ஆவன செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளனரா
என ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அப்பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து சட்டபூர்வமான பாதுகாப்பை அளிக்க வேண்டும்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி!

திருநெல்வேலி அருகே உள்ள நாங்குநேரியில் வசித்து வரும் தம்பதியினர் கூலி தொழிலாளி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.

பிளஸ் 2 படித்து வரும் சின்னத்துரையை அதே பள்ளியில் படிக்கும் வேறு சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ந்து ராகிங் செய்து வந்துள்ளனர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் சின்னதுரை புகாரளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் வீடு புகுந்து சின்னதுரையையும், தடுக்க வந்த அவரது தங்கையையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பியோடிவிட்டனர்.

உடல் முழுவதும் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு ஆரம்ப கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மாணவன் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் 6 பேரை  கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: