ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

பாஜக-அதிமுக இடையே மோதல்.. யாத்திரையை கைவிட்டு இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை

 tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். மதுரை மாவட்டத்தில் தற்போது யாத்திரை நடக்கும் நிலையில் இன்று அவர் திடீரென டெல்லி புறப்பட்டு செல்லும் நிலையில் பின்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். ‛‛என் மண் என் மக்கள்'' எந்த பெயரில் கடந்த மாதம் 28ம் தேதி ராமேஸ்வரத்தில் அவர் பாதயாத்திரை தொடங்கினார்.


இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் கூட்டணி கட்சியை சார்பில் ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த பாதயாத்திரை தொடக்க விழாவை புறக்கணித்தார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்று பேசினார்.

தற்போது அண்ணாமலையில் பாதயாத்திரை மதுரை மாவட்டத்தில் நடந்து வருகிறது. நேற்று மேலூரில் தொடங்கி பாதயாத்திரை நடந்து வருகிறது. இன்று மதுரையில் பொதுக்கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் உள்ளன. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் அவர் டெல்லி செல்கிறார்.

இதனால் மதுரை பொதுக்கூட்டம் மற்றும் பாதயாத்திரையில் தடைப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் தான் அண்ணாமலை டெல்லி பயணம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவை வளர்க்க அவர் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை விட்டுவிட்டு கட்சி மேலிடம் டெல்லி அழைத்ததன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது பாதயாத்திரை தொடங்கிய பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், ‛‛நாங்கள் ஓ பன்னீர் செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்'' என்றார். ஓ பன்னீர் செல்வம் பற்றி அண்ணாமலை பேசியது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஓ பன்னீர் செல்வத்துடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சை அதிமுக தலைவர்கள் ரசிக்கவில்லை.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு க அண்ணாமலையை விமர்சனம் செய்தார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவர் இன்னும் வளர வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‛‛அதிமுகவை தொட்டால் அண்ணாமலை கெட்டார்'' என கடுமையாக சாடியிருந்தார். இதற்கும் பாஜக பதிலடி கொடுத்தது.


நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக-அதிமுக கட்சிகள் தமிழகத்தில் கூட்டணியில் உள்ளன. சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று இருந்தார். இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் அதிமுக-பாஜக தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பேச தான் அண்ணாமலையை பாஜக மேலிடம் டெல்லி அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: